விமானங்களில் இப்படியெல்லாம் கூட திருடுவாங்களா? டில்லியில் 20 ஆண்டுகளாக நடந்த திருட்டு அம்பலம்!
உடன் பயணிப்பவர்களின் உடமையை திருடுவதற்காகவே ஒருவர் ஆண்டுக்கு 200 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளார் என சொன்னால் நம்புவீர்களா? இது எங்கோ வெளிநாட்டில் எல்லாம் நடக்கவில்லை இந்தியாவில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இப்படியாக திருடப்பட்ட பொருட்களை வைத்து இவர் சொந்தமாக ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த பிப்ரவரி 22ம்தேதி அமிர்தசரஸ் பகுதியில் இருந்து டெல்லிக்கு ஏர்இந்தியா விமானத்தில் பயணித்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது நகைகள் தொலைந்து விட்டதாக டெல்லி விமான நிலைய போலீசாரில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரைப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு பயணம் செய்த பயணி ஒருவர் தனக்கும் நகைகள் தொலைந்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

இரண்டு புகார்களையும் பார்க்கும்போது ஒரே விதமாக கேபினில் வைக்கப்பட்ட பேக் காணாமல் போய் உள்ளது, அதில் நகை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் உஷாரான டெல்லி விமான நிலைய போலீசார் இது எதர்ச்சியாக நடந்த சம்பவம் கிடையாது, இதற்கு பின்னால் ஏதோ திட்டமிட்ட சதி இருப்பது தெரிந்து இது குறித்து விசாரணை நடத்த தொடங்கினார்கள். இதற்காக 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இப்படியாக இந்த விமானங்களில் பயணித்த பயணிகள் பட்டியலை வைத்து விமானங்கள் புறப்பட்ட நேரம் உள்ளிட்ட தகவல்களை வைத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது குறிப்பிட்ட ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்த இரு சம்பவத்திலும் ஒரே பயணி ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. அவர் குறித்து விசாரிக்கும் போது அவர் டெல்லியை சேர்ந்த ராஜேஷ் கபூர் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில் போலீசார் அவரை சுற்றி வளைத்து மறைமுகமாக கண்காணித்த போது இவர் இப்படியாக அடிக்கடி விமானங்களில் பயணம் செய்து சக பயணிகளின் உடைமைகளை திருடிச் சென்று அதில் உள்ள பொருட்களை வைத்து சொந்தமாக ஹோட்டல் ஒன்றையே உருவாக்கி நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டெல்லியை சேர்ந்த ராஜேஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளியான செராக்ஸ் ஜெயின் என்பவரையும் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வந்தது. 2005ம் ஆண்டு முதலிலேயே இப்படியாக விமானங்களில் பயணம் செய்து சக பயணிகளின் உடைமைகளை திருடும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதிகபட்சமாக இவர் ஆண்டுக்கு 200 முறை கூட விமானங்களில் பயணம் செய்துள்ளார். ஒரே நாளில் மூன்று நான்கு முறை கூட விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்படியாக இவர் விமான பயணம் செய்யும்போது தன்னுடன் இருக்கும் சக பயணிகளை நோட்டமிடுவார். இவர் பெரும்பாலும் உள்நாட்டு விமான பயணம் மட்டுமே மேற்கொள்வார். இதனால் அந்த உள்நாட்டு விமானத்தில் வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் யாராவது கனெக்டிங் பிலைட்டை பயன்படுத்துகிறார்களா என பார்க்கிறார். பெரும்பாலும் வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்களை எடுத்து செல்வார்கள் என்பது தெரியும்.
பெரும்பாலும் பயணிகள் விமானங்களில் பயணம் செய்யும்போது தங்க நகை உள்ளிட்ட அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்களை தங்கள் கைப்பையில் தான் வைத்திருப்பார்கள். இவர்கள் கையில் வைத்திருக்கும் பையை கேபின் பகுதியில் வைத்து விட்டு பயணம் செய்வார்கள் விமானம் தரை இயங்கியதும் கேபினில் இருந்து தங்களது பையை எடுத்துக் கொண்டு விமானங்களில் இருந்து இறங்குவார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் ராஜேஷ் கபூர் விமானத்தில் போது தான் யாரிடம் எந்த பையை திருட வேண்டும் என்பதை முடிவு செய்து விடுவார். விமானத்திற்குள் சென்றதும் அவர்கள் அருகில் இருக்கும் வகையில் சீட்டில் பார்த்து அமருவார். ஒருவேளை சீட் தள்ளி இருந்தாலும் விமான பணி பெண்களிடம் அனுமதி கேட்டு தனக்கு ஏதாவது பிரச்சனை இருப்பதாக கூறி சீட்டு மாறி அமர்வார்.
விமானம் தரை இயங்கியதும் முதல் ஆளாக விமானத்திலிருந்து எழுந்து தான் திருட நினைக்கும் பை எந்த கேபினில் இருக்கிறதோ அந்த கேபினை திறந்து அந்தப் பையை எடுத்துச் செல்வார். விமானம் இறங்கிய பரபரப்பில் இதை பையின் உரிமையாளர் கவனிக்க தவறி விடுவார். இதை பயன்படுத்தி அந்த கைப்பையை திருடிக் கொண்டு தான் வைத்திருக்கும் பை உள்ளே அதை வைத்து பத்திரமாக விமான நிலையத்திலிருந்து வெளியே சென்று விடுவார்.
அதன் பின் தான் தனது கைப்பை தொலைந்தது தெரியவந்து பையை தொலைத்தவர் உடனடியாக விமான நிலைய போலீசாரில் புகார் அளிப்பார்கள். இதில் ராஜேஷ் கபூர் பெரும்பாலும் வயதான முதியவர்களை டார்கெட் செய்வார். அவர்கள்தான் பெரும்பாலும் விமானம் தரை இறங்கியதும் அனைவரும் இறங்கிய பின்பு கடைசியாக இறங்க நினைப்பார்கள்.
இப்படியாக இவர் பல்வேறு நபர்களிடமிருந்து கை பைகளை திருடி அதில் உள்ள பொருட்களை பயன்படுத்தி டெல்லியில் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதை கண்டுபிடித்த டில்லி போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவர் நடத்திவரும் ஹோட்டலில் ரைடும் நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மூலம் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் பயணிக்கும் போது உங்கள் கைப்பையை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கேபின் பகுதியில் நீங்கள் கைப்பையை வைத்தாலும் விமானம் தரை இயங்கியதும் உங்கள் கைப்பையை வேறு யாரும் எடுத்துச் செல்கிறார்களா என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். அதேநேரம் விமானப்பயண நேரத்திலும் உங்கள் கேபின் திறக்கப்பட்டு உங்கள் பை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்படுகிறதா என்பதையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








