பைக் வேண்டாம் என நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய இளைஞர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க...
இளைஞர் ஒருவர் நடுரோட்டில் பைக்கை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சாலைகள் மிகவும் ஆபத்தானவை. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற மறுப்பதால், ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். அடுக்கடுக்கான போக்குவரத்து விதிமீறல்களில் இந்தியர்கள் ஈடுபடுவதால், இந்திய சாலைகள் பாதுகாப்பு இல்லாதவையாக உள்ளன.

குடிபோதையிலும், அதிவேகத்திலும் வாகனங்களை இயக்குவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பது, ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களை ஓட்டுவது என இந்தியர்களின் போக்குவரத்து விதிமீறல்களை அடுக்கி கொண்டே போகலாம். இவைதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்கள்.

எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தை திருத்தி, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மிக கடுமையாக உயர்த்தியது. இந்த வகையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ஆனால் அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டதால், இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய மோட்டார் வாகன சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வராமல் நிறுத்தி வைத்தன. இன்னும் சில மாநிலங்கள் அபராத தொகைகளை குறைத்து, அமலுக்கு கொண்டு வந்தன.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் பல்வேறு விதங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போலீசார் அபராதம் விதித்த காரணத்தால், இளைஞர் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பை காட்டினார். இதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் நடுரோட்டிலேயே பைக்கை அடித்து நொறுக்கினார்.

அதன்பின் அந்த பைக்கின் மீதே அமர்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சமீப காலமாக இவ்வாறான சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் தற்போது வேறொரு இளைஞர் ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரிகள் அபராத ரசீது வழங்கியதே இதற்கு காரணம். தெற்கு டெல்லி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லி போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு, அந்த இளைஞர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தன்று விகாஸ் என்ற இளைஞர் சாவித்ரி சினிமா அருகே ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியாத காரணத்தால், போலீசார் அவரது பைக்கை நிறுத்தினர். இதன்பின் விகாசுக்கு அபராத ரசீதை போலீசார் வழங்கினர். விகாசுக்கு சுமார் 20 வயது மட்டுமே ஆவதாக கூறப்படுகிறது.

அபராதம் விதித்த காரணத்தால் போலீசாருடன் விகாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் சொன்னதை எதையும் போலீசார் காதில் போட்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் விகாஸ் ஆத்திரமடைந்தார். அத்துடன் பைக்கின் மீது பெட்ரோலை ஊற்றி அதனை தீ வைத்து கொளுத்தினார். நடுரோட்டில் பைக் தீப்பற்றி எரிந்ததால் அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

தற்போது அந்த மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, விகாசுக்கு எதிராக சி.ஆர்.பார்க் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆத்திரமாக நடந்து கொண்டதாலும், போலீசாரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாலும் விகாஸை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதே சமயம் இந்த பைக்கிற்கான அனைத்து ஆவணங்களும் விகாஸிடம் இருந்ததா? என்பது உறுதியாக தெரியவில்லை. விகாஸ் உணவு டெலிவரி ஏஜெண்ட் ஆக பணியாற்றி வருகிறார். ஆனால் இந்த சம்பவம் நடைபெற்றபோது அவர் பணியில் இருந்தாரா? இல்லையா? என்ற தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது வருந்தத்தக்க ஒன்றுதான். அபராத தொகைகள் உயர்த்தப்பட்டிருப்பதன் காரணமாக அதற்கு பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் என்பது மத்திய அரசின் எண்ணம். இதன் விளைவாக இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும்.

இதில், உண்மை இருக்கவே செய்கிறது. கடுமையான தண்டனைகள் வழங்கப்படாத பட்சத்தில், அசட்டு தைரியத்தில் வாகன ஓட்டிகள் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவார்கள். ஆனால் தற்போது ஒரு முறை அபராதம் செலுத்தினால், அவர்கள் மீண்டும் அந்த தவறை செய்வார்களா? என்பது சந்தேகமே.

ஆனால் அபராத தொகைகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இதன் மூலம் போலீசார் வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள் எனவும், இது ஊழலுக்கு வழி வகுத்து விடும் எனவும் கூறுகின்றனர். இதிலும் உண்மை இருக்கவே செய்கிறது. எனவே போலீசார் வசூல் வேட்டையில் இறங்குவதை தடுக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.
அபராத தொகைகளை மிக கடுமையாக உயர்த்திய மத்திய அரசின் நடவடிக்கை எப்படிப்பட்டது? ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி விட்டு, பைக்கை கொளுத்துவது போன்ற விபரீத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாகன ஓட்டிகள் தங்கள் எதிர்ப்பை காட்டுவது சரியா? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








