ஐகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த அடுத்த அதிரடி உத்தரவு இதுதான்.. வாகன ஓட்டிகளை ரவுண்டு கட்டும் போலீசார்
ஐகோர்ட் நீதிபதிகள் அடுத்ததாக மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதனால் போலீசார் வாகன ஓட்டிகளை ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. வாகனங்களில் எவ்வித மாடிபிகேஷனும் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அதாவது உற்பத்தியாளர்கள் வழங்கும் நிலையில்தான் வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் ஒரு சில வாகன உரிமையாளர்கள் இந்த உத்தரவை கடைபிடிப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களை மாடிபிகேஷன் செய்து கொள்கின்றனர். பெரும்பாலும் பிரஷர் ஹாரன்கள் (Pressure Horns) மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் (Aftermarket Silencers) ஆகியவற்றின் மூலம்தான் வாகனங்கள் மாடிபிகேஷன் செய்யப்படுகின்றன.

ஆனால் பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. சாலையில் பயணம் செய்யும் இதர வாகன ஓட்டிகளுக்கும் இதனால் பாதிப்பு உண்டாகிறது. எனவே டெல்லியில் அனைத்து விதமான பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்க வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜஸ்டிஸ் ஃபார் ரைட்ஸ் பவுண்டேஷன் என்ஜிஓ மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் பிரதீக் ஷர்மா தரப்பில் இந்த பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த பொது நல வழக்கு நேற்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் போக்குவரத்து போலீசார் தாக்கல் செய்தனர்.

இதில், ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர வாகனங்களில் இருந்து பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றை நீக்க முயன்று வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்திருந்தனர்.

அதே நேரத்தில் போக்குவரத்து போலீசார் தங்கள் அறிக்கையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை தண்டித்துள்ளதாகவும், அனைத்து பிரஷர் ஹாரன்கள், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மற்றும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் அனைத்து விதமான உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதுபோன்ற உபகரணங்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி முன்னதாக போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன் பேரில்தான் போக்குவரத்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இந்த போக்குவரத்து போலீசாரின் இந்த அறிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை.

பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றை தடை செய்ய இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை எனவும் உத்தரவு பிறப்பித்தனர். எனவே வரும் நாட்களில் பிரஷர் ஹாரன்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகியவற்றை முழுமையாக பறிமுதல் செய்வது உள்பட போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், கார்களில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதியை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணையின்போது கட்டாய ஹெல்மெட் விதி தமிழகத்தில் முறையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் இந்த விதிமுறையை மிக கடுமையாக அமல்படுத்த போலீசார் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








