நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லம்போ கார்... டெல்லியில் பரபரப்பு!
டெல்லியில், லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் ஒன்று இன்று காலை நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில், காரில் இருந்த அதன் உரிமையாளர், காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில், அந்த லம்போர்கினி சூப்பர் கார் கடுமையாக சேதமடைந்தது.

சம்பவம்
தெற்கு டெல்லியின், பதர்பூர் பகுதியில் இந்த சூப்பர் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, காரின் பின்பகுதியில் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.

ஓட்டியவர் தப்பினார்
கார் தீப்பிடித்ததை உணர்ந்து கொண்ட அந்த காரை ஓட்டி வந்தவர், காரிலிருந்து உடனடியாக வெளியேறியதால், காயமின்றி உயிர் தப்பினார். உடனடியாக, தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், அந்த காரில் பற்றிய தீயை அணைத்து பின்னர், பாதி எரிந்த நிலையில், இருந்த காரை பதர்பூர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

காரணம்
தீ பற்றிய லம்போர்கினி அப்போதுதான் சர்வீஸ் மையத்திலிருந்து எடுத்து வரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எரிபொருள் கசிவு காரணமாக, காரில் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

சிறப்பு வாய்ந்த மாடல்
லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் 10 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த நிலையில், கடந்த 2013ல் உற்பத்தி முடிவுக்கு வந்தது. மொத்தம் 14,000 லம்போர்கினி கல்லார்டோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட லம்போர்கினி கார் என்ற பெருமைக்கும் உரியது. இதற்கு மாற்றாக தற்போது லம்போர்கினி ஹூராகென் கார் விற்பனையில் இருக்கிறது.

மதிப்பு
தீயில் சேதமடைந்த லம்போர்கினி கல்லார்டோ கார் 2.7 கோடி ரூபாய் மதிப்புடையது. காரில் தீப்பற்றியது குறித்து டெல்லி, பதர்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Image Source: Super cars in India Forum


Click it and Unblock the Notifications