ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன், தனது ஃபோர்டு காரை ஆம்புலன்ஸாக மாற்றிய டெல்லி ஐடி ஊழியர்!!
டெல்லியை சேர்ந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் உரிமையாளர் ஒருவர் கொரோனோ நோயாளிகளுக்கு உதவுவதற்காக தனது காரை அவசரகால வாகனமாக மாற்றியுள்ளார். இவரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாட்களாக குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ்கள் போதிய அளவில் உள்ளனவா என்பது கேள்வியே.

ஏனெனில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் கிடைத்த வாகனத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் அவலங்களையும் பார்த்துள்ளோம். குறிப்பாக வட இந்தியாவில் இத்தகைய மோசமான சூழ்நிலை தலைவிரித்தாடியது.

இதனாலேயே பலர் தங்களது வாகனங்களை சமூக பணிக்காக பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். அந்த வரிசையிலேயே தற்போது இந்த டெல்லி நகரவாசி தனது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை மருத்துவ அவசரகால வாகனமாக மாற்றியமைத்துள்ளார்.

இதற்காக இவர் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், ஆக்ஸிமீட்டர், உணவுகள், தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் கேன்கள் முதலியவற்றை தனது காரில் பொருத்தியுள்ளார். நொய்டாவை சேர்ந்த ஐடி கம்பெனியில் பணியாற்றிவரும் இவரது பெயர் நாகியா ஆகும்.

கொரோனா நோயாளிகளுக்கு கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக உதவி செய்துவரும் நாகியா இதுகுறித்து அளித்த பேட்டியில், இது ஏப்ரல் மாதம் தொடங்கியது. என் அயலவர்களில் ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டதால் நான் அவர்களுக்கு உதவி செய்தேன். அந்த சமயத்தில் சந்தையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை.

எப்படியோ குருத்வாராவில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்தோம் என்றார். அதன்பிறகே தனக்கு தெரியாதவர்களுக்கும் உதவி செய்ய ஆரம்பித்த நாகியா, ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட தனது ஈக்கோஸ்போர்ட் காரில் இதுவரையில் 23 கொரோனா நோயாளிகளை அழைத்து சென்றுள்ளார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி தனது காரில் பொருத்த உண்மையில் நாகியா பெரிதும் கஷ்டப்பட்டுள்ளார். ஏனெனில் கையில் பணம் இருந்தாலும், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத துவக்கத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு டெல்லியில் மிக பெரிய அளவில் தேவை ஏற்பட்டது.

இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தேவைப்படுவோர் வாங்கியதால், டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் புதிய ஆம்புலன்ஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர சுகாதார துறையினரால் இயலவில்லை.

நாகியா தனது ஈக்கோஸ்போர்ட் காரை முழுக்க முழுக்க தனது சொந்த பணத்தின் மூலமாகவே ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இவ்வாறு முகம் தெரியாதவர்களுக்காக உதவி செய்வதால் பாதுகாப்பு கருதி குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் நாகியா, தேவைப்படுவோருக்கு உணவு மற்றும் தண்ணீரையும் வழங்குகின்றார்.


Click it and Unblock the Notifications








