டெல்லியில் அறிமுகமாகிறது 'டிரைவர்லெஸ்' மெட்ரோ ரயில்!
வெளிநாடுகளில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நம் நாட்டில் முதல்முறையாக டெல்லியில் டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
மூன்றாவது கட்டமாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ வழித்தடங்களில் இந்த ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சோதனை ஓட்டம்
வரும் ஜூலை மாதம் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டம் துவங்கப்பட உள்ளது. ஆனால், முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஓட்டுனர் ஒருவரின் கண்காணிப்பில் இந்த ரயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

வழித்தடங்கள்
வரும் ஜூலை 1ந் தேதி மேற்கு ஜானகிபுரியிலிருந்து, தாவரவியல் பூங்கா வரையிலான வழித்தடம் 8ல் இந்த ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கம் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து, காஷ்மீரி கேட் பகுதியிலிரந்து ஐடிஓ வரையிலான வழித்தடம் 6ம் எண்ணிலும் துவங்கப்பட உள்ளது. அக்டோபர் 16ந் தேதி மஜ்லிஸ் பார்க் முதல் சிவ் விஹார் வரையிலான வழித்தடம் 7 ல் சோதனை ஓட்டம் துவங்கப்படுகிறது.

பெட்டிகள் இறக்குமதி
கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் ரோட்டெம் நிறுவனம் இந்த மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்து கொடுத்துள்ளது. முதல்கட்டமாக 6 மெட்ரோ ரயில் பெட்டிகள் கடல் மார்க்கமாக குஜராத்திலுள்ள முந்த்ரா துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் அசெம்பிள்
பெங்களூரிலுள்ள BEML மற்றும் ஹூண்டாய் ரோட்டெம் இணைந்து இந்த ரயில் பெட்டிகளை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 81 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு இந்த வழித்தடங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.

கட்டுப்பாட்டு அறை
ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கட்டுப்படுத்த முடியும். மேலும், ரயிலுள்ள தானியங்கி சாதனங்கள் மூலமாகவும் ரயில் இயங்கும். இரு வழி கட்டுப்பாட்டு முறை மூலமாக உச்சப்பட்ச பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சாதனங்கள்
ரயிலின் இருபுறங்களிலும் இருக்கும் கேமரா மூலமாக வழித்தடத்தில் உள்ள தடைகளை கண்டறிந்து தானியங்கி முறையில் ரயில் நிறுத்தும் வசதியும் உள்ளது. மேலும், சென்சார்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன்மூலமாக, ரயில்கள் மோதிக்கொள்ளும் வாய்ப்பும் அறவே தவிர்க்கப்படும்.

அதிக பயணிகள்
மெட்ரோ ரயில் இருபுறத்திலும் இயக்குவதற்கான ஓட்டுனர் அறைகள் நீக்கப்படுவதால், கூடுதலாக 60 பயணிகள் வரை செல்ல முடியும். ஏற்கனவே ஒரு பெட்டியில் 1,70 பயணிகள் சென்று வந்த நிலையில், இந்த புதிய பெட்டிகளில் 1866 பேர் வரை பயணிக்க முடியும். இந்த ரயில் பெட்டிகள் 3.2 மீட்டர் அகலம் கொண்டது. பழைய பெட்டிகள் 2.9 மீட்டர் அகலம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

சிறப்பம்சங்கள்
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் ரயில்களின் வேகம் 10 சதவீதம் அதிகரிக்கப்படும். மின் மோட்டார்களுக்கான மின்சார உபயோகம் 20 சதவீதம் வரையிலும் குறையும் என்பதால், இயக்குதல் செலவும் கணிசமாக குறையும்.

வசதிகள்
வைஃபை வசதி, 37 இன்ச் எல்சிடி மின்னணு பலகையில் வழித்தட விபரம் காட்டும் வசதி, மொபைல்போன் சார்ஜர்கள், பெண்களுக்கு தனிப்பெட்டிகள், சிசிடிவி கேமரா என பல வசதிகளை பயணிகள் பெற முடியும்.

அறிமுகம்
அடுத்த ஆண்டு முதல் ஓட்டுனர் துணையில்லாமல், தானியங்கி முறையிலான இந்த டிரைவர்லெஸ் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெப்போ
டெல்லியிலுள்ள முகுந்த்பூர் டெப்போவிலிருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும்.

சென்னையின் புதிய அடையாளம்... மெட்ரோ ரயிலின் வசதிகளும், சிறப்புகளும்!!


Click it and Unblock the Notifications








