பின்புறத்திலும் எஞ்சின்... 160 கிமீ வேகம் வரை ஓடப்போகும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்!!
இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக முன் மற்றும் பின்புற எஞ்சின் இணைக்கப்படும் முதல் ராஜ்தானி ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது.
இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக முன் மற்றும் பின்புற எஞ்சின் இணைக்கப்படும் முதல் ராஜ்தானி ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதன்மூலமாக,மும்பை - டெல்லி இடையிலான பயண நேரம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ரயில்வேத் துறை ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராஜ்தானி ரயிலில் இரண்டு எஞ்சின்களை பொருத்தும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

அதன்படி, மும்பை- டெல்லி நிஜாமுதின் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட சிறப்பு ராஜ்தானி ரயில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.

பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் தண்டவாளம் ஏற்றமாக இருக்கும் இடங்களில் மட்டும் ரயிலின் முன்புற எஞ்சின் தவிர்த்து, பின்புறத்திலும் எஞ்சின் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அதேபோன்று, சரக்கு ரயில்களில் முன்புறத்தில் இரண்டு ரயில் எஞ்சின்கள் இணைக்கப்படுவதும் வழக்கமான விஷயம்தான்.

ஆனால், பயணிகளில் ரயிலில் முழுமையான பயணத்திற்கும் பின்புறத்தில் ரயில் எஞ்சின் இணைக்கப்படுவது இதுவே முதல்முறையாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சரக்கு ரயில்களில் இந்த முயற்சி தொழில்நுட்ப அளவில் வெற்றிபெற்றுள்ளது.

மும்பை- நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்புறத்திலும், பின்புறத்திலும் எஞ்சின்கள் இணைக்கப்படுவதால், ரயிலின் வேகத்தை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க முடியும். முன்புற, பின்புற எஞ்சின் இணைக்கப்பட்ட சிறப்பு ராஜ்தானி ரயில் மூலமாக மொத்த பயண நேரம் 2 மணி நேரம் வரை குறையும்.

தற்போது மும்பை- நிஜாமுதீன் இடையிலான 15.5 மணிநேரமாக உள்ள பயண நேரம் 13.5 மணிநேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கமாக இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த நடைமுறையில் எஞ்சின்களை இணைக்க ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்புறத்தில் உள்ள எஞ்சினுடன் பின்புற எஞ்சினுக்கான கட்டுப்பாடுகள் இணைக்கப்படும். ஓட்டுனர் இரண்டு எஞ்சின்களையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த முடியும்.
எனினும், தொழில்நுட்ப அளவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்புற, பின்புற எஞ்சின்களை சரியான முறையில் இணைத்து கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளில் ரயில்வே பணிமனை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில் நாடு முழுவதும் இருந்து தலைநகர் டெல்லிக்கு இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், முக்கிய நகரங்களுக்கு இடையிலான சதாப்தி ரயில்களிலும் இரட்டை எஞ்சின் இணைக்கப்படும் முயற்சியை மேற்கொள்ளவும் ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications