டெம்போவில் ஏற்றி செல்லப்பட்ட ஜாவா பைக்கிற்கு அபராதம்... காரணத்தை பார்த்து ஓனர் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டாரு
டெம்போவில் ஏற்றி செல்லப்பட்ட ஜாவா 42 பைக்கிற்கு, தவறான காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே வரையறுக்கப்பட்ட வேக வரம்பை மீறி அதிவேகத்தில் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் அதிவேகத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முயல்கிறது. அதிவேகத்தில் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதில் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது பெரிய நகரங்களின் முக்கியமான பகுதிகளில், ஆட்டோமேட்டிக் ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வேக வரம்பை மீறும் வாகனங்களை கண்டறிவதுடன், அந்த வாகனங்களை புகைப்படமும் எடுக்கும் திறன் இந்த கேமராக்களுக்கு உண்டு. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இத்தகைய ஆட்டோமேட்டிக் ஸ்பீடு கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலான நேரங்களில் தங்களது வேலையை கச்சிதமாக செய்யும்.

அதே சமயம் சில நேரங்களில் தவறான குற்றச்சாட்டுகளை கூறி விடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆம், பேட்டரியில் ஏற்பட்ட பிரச்னையால் டெம்போவில் கொண்டு செல்லப்பட்ட ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஒன்று, அதிவேகத்தில் பயணம் செய்ததாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெம்போவின் மீது நின்று கொண்டிருந்த ஜாவா 42 மோட்டார்சைக்கிள் எப்படி அதிவேகத்தில் செல்ல முடியும்? ஆட்டோமேட்டிக் ஸ்பீடு கேமராக்கள் ஒரு வரம்பிற்குள்தான் செயல்பட முடியும் என்பதை இச்சம்பவம் எடுத்து காட்டியுள்ளது. டெல்லியின் இரண்டு இடங்களில் இந்த ஜாவா 42 மோட்டார்சைக்கிளுக்கு, அதிவேகத்திற்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஜாவா 42 பைக்கின் உரிமையாளர் மனோஜ் குமார், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஜாவா முகநூல் குழு வாயிலாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கே பிரச்னை என்னவென்றால், டெம்போவின் மீது ஏற்றி செல்லப்படும் பைக்கையும், தனது சொந்த சக்கரங்களில் ஓடும் பைக்கையும் வேறுபடுத்தி பார்க்க கூடிய புத்தி கூர்மை ஆட்டோமேட்டிக் ஸ்பீடு கேமராக்களுக்கு இல்லை என்பதுதான்.

மனிதர்களால் இந்த வித்தியாசத்தை எளிதாக உணர முடியும். ஆனால் ஆட்டோமேட்டிக் ஸ்பீடு கேமராக்கள் தனக்கு எதற்காக ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளதோ? அதை மட்டும் சரியாக செய்யும். இதன் விளைவாகதான் இந்த ஜாவா 42 மோட்டார்சைக்கிள் அதிவேகத்தில் சென்றதாக தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் உள்ளன. இதன் காரணமாக தவறு செய்யாத வாகன உரிமையாளர்கள் தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்வது அவசியம்.
Image Courtesy: Manoj Kumar


Click it and Unblock the Notifications








