இனி இந்த வேகத்தில்தான் வண்டியை ஓட்ட வேண்டும்... மீறினால் கடும் நடவடிக்கை... காவல் துறை புதிய உத்தரவு!
அனைத்து வகையான வாகனங்களுக்கான புதிய வேக வரம்பை காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களுக்கான வேக வரம்பை டெல்லி போக்குவரத்து காவல் துறை தற்போது மாற்றியமைத்துள்ளது. இதன்படி டெல்லியில் இனிமேல் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர்கள் வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய முடியும். வாகனங்களின் வகை மற்றும் சாலைகளை பொறுத்து, வேக வரம்பு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்1 வகையை சேர்ந்த வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கார்கள், எஸ்யூவிக்கள், டாக்ஸிகள் மற்றும் இதர கேப் வாகனங்கள் எம்1 வகையின் கீழ் வருகின்றன. அதே நேரத்தில் இரு சக்கர வாகனங்களுக்கான வேக வரம்பானது மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் வகையின் கீழ் வருகின்றன. அதே சமயம் எம்2 மற்றும் எம்3 வகையை சேர்ந்த வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேன்கள் மற்றும் நடுத்தர டெலிவரி வாகனங்கள், இந்த வகையின் கீழ் வருகின்றன.

ஆனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் இதர சிறிய சாலைகளில் எந்த வகையை சேர்ந்த வாகனம் என்றாலும், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். இந்த புதிய வேக வரம்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர்.

புதிய வேக வரம்பை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். டெல்லி உள்பட அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் வேக வரம்பை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு அதிவேகம்தான் முக்கியமான காரணமாகும்.

அதிவேகத்தில் பயணம் செய்வதால், ஒரு சில நிமிடங்களை மட்டுமே மிச்சம் பிடிக்க முடியும். ஆனால் உயிர் அதை காட்டிலும் மேலானது என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் சற்று முன் கூட்டியே கிளம்புவதன் மூலம் அவசரமாக பயணிக்க வேண்டிய சூழலையும் தவிர்க்கலாம்.

அத்துடன் நீங்கள் அதிவேகத்தில் பயணம் செய்தால், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது. இதை உணர்ந்து கொண்டு, வேக வரம்பை முறையாக பின்பற்றினால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

இதனுடன் மற்ற போக்குவரத்து விதிமுறைகளையும் வாகன ஓட்டிகள் அனைவரும் பின்பற்றுவது அவசியம். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சாலை விபத்துக்கள் காரணமாக சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றால், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்.


Click it and Unblock the Notifications








