டெல்லி போலீஸ் பயன்பாட்டிற்கு ரூ.4 கோடி மதிப்பிலான ஆஸ்டன் மார்டின் சொகுசுக் கார்?
டெல்லி போலீசார் ரூ.4 கோடி விலையுள்ள ஆஸ்டன் மார்டின் காரை வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.
வளர்ந்த நாடுகளில் காவல்துறையினரின் பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களை உபயோகப்படுத்துவது சாதாரண வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்தியாவில்?

இந்தியாவின் பல மாநில காவல்துறையினரும் மாருதி ஜிப்ஸிக்களைத் தான் தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். என்றாலும் தற்போது டொயோட்டா இன்னோவா, ஈகோ ஸ்போர்ட்ஸ், எர்டிகா போன்ற புதிய மாடல்களுக்கு மாறி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் டெல்லி போலீஸ் என பேட்ஜ் ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட ஆஸ்டன் மார்ட்டின் ரேபீட் சொகுசு காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த காரினை உண்மையிலே டெல்லி போலீஸார் வாங்கியுள்ளனரா ? என காரசாரமான விவாதங்கள் கிளம்பிய நிலையில் இது குறித்து உண்மை நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.

இது படத்திற்காக ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட ரீல் போலீஸ் கார். தோனி படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இருவரும் இணைந்து நடிக்கும் ‘டிரைவ்' என்ற திரைப்படத்திற்காக இந்த கார் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது.

470 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 5.9 லிட்டர் வி12 எஞ்சினை பெற்ற ஆஸ்டன் மார்ட்டின் ரேபீட் மிகவும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றாக விளங்குகின்றது.

ஆஸ்டன் மார்ட்டின் ரேபீட் கார் மணிக்கு அதிகபட்சமாக 303 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் பெற்றிருக்கிறது.

மேலும் 0-100 கிமீ வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடும் இந்தக் காரின் விலை ரூ. 4.1 கோடியில் இருந்து தான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








