பிரம்மாண்ட வெற்றிக்கு பின் புரட்சி... அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு... என்னனு தெரியுமா?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையிலான வெற்றியை அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றுள்ளார்.

தற்போது அவர் மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்த வரிசையில், 100 புதிய தாழ்தள ஏசி பஸ்களின் சேவையை அவர் நேற்று (மார்ச் 6) தொடங்கி வைத்தார். ராஜ்காட் டெப்போவில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், தீ கண்டறியும் அமைப்பு, ரிமோட் மானிட்டரிங் சிஸ்டம், ஜிபிஎஸ் டிராக்கர்கள், பேனிக் பட்டன்கள், சிசிடிவி கேமரா ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

இந்த பஸ்கள் அனைத்துமே 37 சீட்டர் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக அனைத்து பேருந்துகளிலும் ஹைட்ராலிக் லிஃப்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பஸ்களின் உள்ளே 14 பேனிக் பட்டன்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் 7 என மொத்தம் 14 பேனிக் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் சில அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டார். இதன்படி டெல்லியில் பயணிகளின் நலன் கருதி, 9 ஆயிரம் புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த பேருந்துகள் அனைத்தும் அடுத்த ஓராண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''தேர்தலுக்காகதான் நாங்கள் புதிய பேருந்துகளை அறிமுகம் செய்வதாக ஒரு சிலர் பேசி வந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்த பிறகும் கூட, நாங்கள் புதிய பஸ்களை அறிமுகம் செய்து கொண்டுதான் உள்ளோம். அடுத்த ஒரு ஆண்டிற்குள் டெல்லி அரசு 9 ஆயிரம் புதிய பஸ்களை அறிமுகம் செய்யும்'' என்றார்.

டெல்லி போக்குவரத்து துறையை முன்மாதிரியானதாகவும், அதிநவீனமானதாகவும் மாற்ற இருப்பதாகவும், முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''தேர்தலை தொடர்ந்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளேன். டெல்லி போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டுள்ளோம்.

இதன் ஒரு பகுதியாக புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் மார்ச் மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யப்படும்'' என்றார். டெல்லி மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அத்துடன் மத்திய அரசும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளது.

காற்று மாசுபாடு பிரச்னை மட்டுமல்லாது, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும், எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவி செய்யும். இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. எனவே மக்களின் கவனம் மின்சார வாகனங்கள் மீது திரும்பி வருவதால், முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








