சாலையில் இனி பஸ், லாரிகளுக்கு தனி பாதை... மற்ற வாகனங்கள் செல்ல முடியாது... மீறினால் இவ்ளோ அபராதம் கட்டணுமா?
வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து சாலையில் பஸ் மற்றும் லாரி போன்ற வாகனங்களுக்கு தனி பாதை ஏற்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி (Delhi) மாநில அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் (April 1) இருந்து, லேன் விதிமுறைகளை (Lane Discipline) மிக கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். இதன்படி டெல்லியில் 15 சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களுக்கு பிரத்யேகமான லேன்கள் ஒதுக்கப்படவுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்படாத லேன்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது, அதாவது மற்ற லேன்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மீது விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களால் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய லேன்களை அடையாள குறியிடும் பணிகளை டெல்லி போக்குவரத்து காவல் துறையினரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் மேற்கொள்ளவுள்ளனர்.

பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற சரக்கு வாகனங்கள் ஒரு நாளின் 24 மணி நேரமும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட லேன்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மற்ற வாகனங்கள் இந்த லேன்களை பயன்படுத்த கூடாது. மீறினால் நாங்கள் மேலே குறிப்பிட்டபடி அபராதம் அல்லது சிறை தண்டனை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இருப்பினும் இரவு 10 மணியில் இருந்து காலை 8 மணி வரை இந்த லேன்களை பயன்படுத்தி கொள்ள மற்ற வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் முதற்கட்டமாக 15 சாலைகளில் மட்டும் இந்த விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் படிப்படியாக மற்ற சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி சாலைகளை பாதுகாப்பாக மாற்றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளன. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. முன்னதாக இந்த விதிமுறைகள் குறித்து பஸ்களின் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக தேவையான இடங்களில் அடையாள குறியீடுகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவுள்ளன. ஒருவேளை பஸ்களுக்கு என ஒதுக்கப்பட்ட லேன்களில், கார்கள் போன்ற வாகனங்கள் மாறி வந்து விட்டால் என்ன செய்வார்கள்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். முதலில் காரை எடுக்கும்படி அறிவுறுத்தப்படும்.

அதனை கேட்டு கொண்டால், அபராதத்துடன் தப்பித்து விடலாம். ஒருவேளை எடுக்க முடியாது என அடம் பிடித்தால், காரை அதிகாரிகள் 'டோ' (Tow) செய்து கொண்டு சென்று விடுவார்கள். இது நடக்கும்பட்சத்தில், அபராத தொகையுடன் சேர்த்து, காரை 'டோ' செய்து கொண்டு சென்றதற்கான கட்டணத்தையும் காரின் உரிமையாளர் செலுத்த வேண்டும்.

எனவே விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதுதான் நன்மை பயக்கும். இந்த லேன் விதிமுறைகளை முறையாக கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். லேன் மாறி வரும் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக க்ரேன்களும் (Cranes) இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

லேன் விதிமுறைகளை மீறி இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் புகைப்படம் எடுக்கப்படுவதுடன், வீடியோவும் எடுக்கப்படும். சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இவை ஆதாரமாக பயன்படுத்தப்படும் என போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற்காலத்தில் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற விதிமுறைகள் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி டெல்லி நடைபெற்று வருகிறது. தற்போதைய டெல்லி அரசு இதுபோன்ற லேன் விதிமுறைகளை தீவிரமாக அமலுக்கு கொண்டு வருவதுடன் மட்டுமல்லாது, காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








