நகரத்திற்குள் ஃபார்ச்சூனரை ஓட்டி வந்தவருக்கு ரூ. 30,000 அபராதம் விதித்த போலீஸ்.. ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்க!
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, பழைய வாகனங்களினால் அந்த நகரம் மிகக் கடுமையான மாசுபாட்டிற்கு உள்ளாவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது. ஆகையால், பழைய வாகனங்களுக்கு எதிராக டெல்லி அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிலையிலேயே, நகரத்திற்குள் டொயோட்டா ஃபார்ச்சூனரை ஓட்டிச் சென்றவருக்கு அம்மாநில போக்குவரத்துக் காவலர்கள் கடுமையான அபராதத்தை விதித்து நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலத்தில் சமீபத்தில் பிஎஸ் 4 டீசல் மற்றும் பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

நவம்பர் 2 இல் இருந்து இது புதிய விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையிலேயே டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கார் ஓர் யூட்யூபருக்கு சொந்தமானது என தெரிகின்றது. மேலும், இது ஓர் பிஎஸ் 4 வகை டீசல் எஞ்ஜின் கொண்ட ஃபார்ச்சூனர் என்றும் கூறப்படுகின்றது.
இந்த காரை டெல்லியில் இயக்குவது புதிய விதிகளின்படி தண்டனைக்குரிய செயல் ஆகும். இதன் அடிப்படையிலேயே டெல்லி போக்குவரத்து காவலர்கள் அந்த யுட்யூபரின் பிஎஸ்4 டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு அபராதம் விதித்து இருக்கின்றனர். ரூ. 30,500க்கான் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த தகவலை யுட்யூபரே அவரது யுட்யூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.

இந்த வகை காரின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதே தனக்கு தெரியாது என அந்த யுட்யூபர் தெரிவித்து இருக்கின்றார். சமீபத்தில் அவருடைய சகோதரன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி இருக்கின்றார். அவரை டெல்லி விமான நிலையம் அழைத்துச் சென்றபோதே போலீஸிடத்தில் சிக்கி இந்த பெரும் தொகை அபராதத்திற்கு யுட்யூபர் ஆளாகி இருக்கின்றார்.
முதலில் யுட்யூபரின் ஃபார்ச்சூனர் காரை தடுத்தி நிறுத்திய காவலர்கள், ஆவணத்தைச் சரிபார்த்திருக்கின்றனர். இதன் பின்னரே அந்த கார் பிஎஸ்4 வகை டீசல் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. முதலில் தனக்கு அபராதம் விதித்தது குறித்து குழம்பி போன யுட்யூபர், இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறி அவர்களிடத்தில் கூறி அபராதத்தில் இருந்து தப்பிக் முயற்சித்திருக்கின்றார்.
ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்ட காவலர்கள் உடனடியாக அபராத செல்லாணை போட்டு அவரது கைகளில் கொடுத்திருக்கின்றனர். ஆகையால், டெல்லி போக்குவரத்து காவலர்கள் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர், இந்த சம்பவத்தின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.
அதேவேளையில், தடை செய்யப்பட்ட வாகனத்தை இயக்குவதற்கு ரூ. 20 ஆயிரமே அபராதம் என கூறப்படுகின்றது. இந்த ஃபார்ச்சூனருக்கு மிக அதிக அபராதம் வழங்குவதற்கு காரணமாக, அந்த காரின் பியூசி சான்று காலாவதியானதே காரணமாக இருக்கின்றது. இது சரியாக இருந்திருந்தால் அக்காருக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், இந்த விஷயத்திலும் அவர் தவறவிட்டிருக்கின்றார். அதனால்தான் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக ரூ. 30,500க்கான செல்லாண் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில், ரூ. 500 கூடுதலாக உள்ளதே, அது எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். கூடுதலாக சில ஆவணங்களை யுட்யூபர் காட்ட தவறிவிட்டதாகக் கூறி காவலர்கள் 500 ரூபாயையும் அபராதத்துடன் சேர்த்திருக்கின்றனர்.
இதனால்தான் மிக அதிகபட்ச தொகை அவர்களுக்கு அபராத விதிக்கப்பட்டு உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பியூசி சான்று காலாவதியாகி இருந்தாலும், அதனை உடனடியாக புதிக்க வேண்டும் என்கின்றனர் டெல்லி காவலர்கள். ஆகையால், டெல்லி மக்கள் மட்டுமல்ல மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிஎஸ் 4 டீசல் அல்லது பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் டீசல் காரைக் கொண்டு டெல்லி செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து விதிகள் நாளுக்கு நாள் மிக கடுமையாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே மாநிலத்தில் காற்று மாசுப்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக டெல்லி அரசாங்கம், பழைய வாகனங்களின் பயன்பாட்டை அடியோடு ஒழிக்கும் பொருட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








