நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் உரிமையாளர் புகார்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு போக்குவரத்து துறை நோட்டீஸ்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உரிமையாளர் ஒருவர் ரேஞ்ச் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி போக்குவரத்து துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்த ரேஞ்ச், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கிடைக்கவில்லை என அந்த காரின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர், டெல்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவ் பகுதியில் உள்ள டீலர்ஷிப்பில் அந்த காரை வாங்கியுள்ளார். அதன்பின் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி அந்த காரை பதிவு செய்துள்ளார். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தபடி 312 கிலோ மீட்டர் ரேஞ்ஜை நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி வழங்க தவறி விட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் மீது புகார் கூறியுள்ள நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர் டெல்லியின் நஜாஃப்கர் பகுதியை சேர்ந்தவர்.

டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்பில் இதுகுறித்து புகார் அளித்தபோது, ரேஞ்ஜை உயர்த்துவதற்கு அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால் அந்த ஆலோசனைகள் அனைத்தையும் சரியாக பின்பற்றிய பின்னரும், டாடா மோட்டார்ஸ் உறுதியளித்த ரேஞ்ச் கிடைக்கவில்லை என நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர் கூறியுள்ளார்.

குறிப்பாக 200 கிலோ மீட்டர் ரேஞ்ஜை கூட தனது கார் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 15ம் தேதி மதியம் 12 மணிக்கு போக்குவரத்து துறை அதிகாரி முன்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருவேளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரதிநிதியை அனுப்ப தவறினால், போக்குவரத்து துறை அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானியம் பெறுவதற்கு தகுதியான எலெக்ட்ரிக் வாகனங்களின் பட்டியலில் இருந்து, நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை நீக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை பரிசீலிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு, அம்மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கீழ் மானியம் பெறுவதற்கு தகுதியான வாகனங்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி இருந்து வருகிறது. இதன் ரேஞ்ச் குறித்து எழுந்த புகாரின் பேரில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








