டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! ஆர்டிஓ பக்கமே போக வேண்டாம்... வீட்ல இருந்தே அனைத்தையும் பெற முடியும்...
டெல்லி அரசாங்கம் போக்குவரத்துத் துறையை முற்றிலுமாக ஆன்லைன் சேவைக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், சாப்பாடு தொடங்கி மருந்துகள் வரை ஆன்லைன் புக்கிங்கிற்கு மாறின. இந்த ஆன்லைன் வழி நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்தாலும், கடந்த ஆண்ட்டிலேயே அதிகளவில் மக்கள் இதை பயன்படுத்த தொடங்கினர்.

இது நேரடி தொடர்பைக் குறைத்து டிஜிட்டல் வழி செயல்பாடுகளை ஊக்குவிக்கும். இந்த நோக்கிலே இதனை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக இதனை மத்திய, மாநில அரசுகளும் ஊக்குவித்தன.

இந்த நிலையில், தேசத்தின் தலைநகரான டெல்லியில் போக்குவரத்துத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் ஆன்லைனுக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் நேரடி தொடர்பு தவிர்க்கப்பட்டு அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்பட இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கின்றது.

வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து ஆன்லைன் வழி சேவை தொடங்கப்பட இருக்கின்றது. 70-ல் 68 சேவைகளை இணையத்தின் வாயிலாக வழங்க டெல்லி போக்குவரத்துத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் மிக முக்கியமான சேவைகளைத் தவிர பிற அனைத்தையும் நேரடியாக அல்லாமல் ஆன்லைன் வாயிலாகவே பெற்று கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

முகவரி மாற்றம், ஆவணத்தின் நகலுக்கு விண்ணப்பத்தில், சர்வதேச ஓட்டுநர் அனுமதியைப் பெறுதல் மற்றும் உரிமைத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக இனி ஆர்டிஓ செல்ல வேண்டாம் என போக்குவரத்துத்துறை கூறுகின்றது.

இந்த புதிய செயல்பாட்டின்மூலம் நடைபெறும் அனைத்துவிதமான ஊழல்கலையும் களையெடுக்க முடியும் என அரசு நம்புகின்றது. மேற்கூறியது மட்டுமின்றி படிப்படியாக பிற சேவைகளும் ஆன்லைன் சேவையில் இணைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு சேவைகள் அனைத்தும் ஆன்லைன் வழிமுறைக்கு மாற்றப்பட்ட பின்னர் விண்ணப்பததாரர்கள் ஃபிட்னஸ் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்கான பரிசோதனையை மேற்கொள்வது போன்ற முக்கிய செயல்பாட்டுகளுக்கு மட்டுமே நேரில் வர வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுமட்டுமின்றி, அந்தந்த கல்லூரி மற்றும் பள்ளி தலைவர்களே தங்களின் மாணவர்களுக்கான ஓட்டுநர் பழகும் உரிமத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கவும் பரிசீலித்து வருகின்றது டெல்லி அரசு. ஆகையால், எதிர்காலத்தில் மாணவ - மாணவிகள் தங்களுக்கான ஓட்டுநர் பழகும் உரிமத்தைப் பெற தனியாக ஆர்டிஓ அல்லது இடைத்தரககர்களை நாடும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.

இதுதவிர ஆன்லைன் சேவைக்கு அப்கிரேட் ஆவதனால் மக்களின் நேர விரயம் தவிர்க்கப்படும். தொடர்ந்து, அவர்களால் போக்குவரத்து பயண செலவையும் மிச்சப்படுத்த முடியும். இதுதவிர, மிக முக்கியமாக தேவையற்றை தொல்லைகளான லஞ்சம் போன்றவற்றை அவர்களால் தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








