சிறிய ஸ்டிக்கர் தான்... ஒட்டியில்லைனா ரூ.5,000 அபராதம்! ஒவ்வொரு சாலையிலும் வளைச்சு வளைச்சு பிடிக்க போறாங்க!!
கார்கள் திருடுப்போகும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று ஆகும். இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக எண்ணிக்கையில் கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, டெல்லியில் போக்குவரத்து விதிமுறைகளும், மோட்டார் வாகன சட்டங்களும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. இந்த நிலையில், டெல்லியில் குறிப்பிட்ட ஒரு சட்டம் மேலும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது அபராதங்களை விதிக்க போலீசார் ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் அதிபாதுகாப்புமிக்க வாகன நம்பர் பிளேட் (HSRP) அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான நம்பர் பிளேட்டை காட்டிலும் பல விதங்களில் நன்மை தரக்கூடியதாக அதிபாதுகாப்புமிக்க வாகன நம்பர் பிளேட் உருவாக்கப்பட்டது. எளிதில் வாகன எண்ணை அடையாளம் காணக்கூடியதாகவும், வாகன பதிவெண்ணை எளிதில் அழிக்க முடியாததாகவும் அதிபாதுகாப்புமிக்க வாகன நம்பர் பிளேட் விளங்குகிறது.

அலுமினியத்தால் உருவாக்கப்படும் இந்த HSRP ஆனது வாகனத்தின் சேசிஸ் (Chassis) எண் உடன் இணைக்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டிலேயே இந்த பாதுகாப்புமிக்க நம்பர் பிளேட் அறிமுகம் செய்யப்பட்டாலும், இவற்றை கட்டாயமாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்கிற சட்டம் 2019ஆம் ஆண்டில்தான் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 2019இல் அமலுக்கு கொண்டுவரப்பட்ட பின்பும் HSRP-இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதாவது, குரோமியம் உலோகத்தால் செய்யப்பட்ட 3டி எழுத்துருக்களை கொண்டுவந்தது மற்றும் லேசரால் பொறிக்கப்பட்ட குறியீடுகளை வழங்கியது என வாகன நம்பர் பிளேட்டை மேலும் எவ்வாறு எல்லாம் பாதுகாப்புமிக்கதாக மாற்ற முடியுமோ அந்த வேலைகள் எல்லாம் நடந்தன. HSRP நம்பர் பிளேட்டை மேலும் எந்தெந்த வழிகளில் பாதுகாப்பானதாக மாற்றுவது என்பது தொடர்பான ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2019ஆம் ஆண்டில், நாட்டில் அனைத்து வாகனங்களிலும் HSRP கட்டாயமாக்கப்பட்ட போது, இதன் உடன் சேர்த்து இன்னொரு விதிமுறையையும் மத்திய அரசு கொண்டுவந்தது. அதாவது, வாகனத்தில் என்ன மாதிரியான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பதை ஸ்டிக்கர் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்பது அந்த விதிமுறை ஆகும்.
அதாவது, பெட்ரோலில் இயங்கக்கூடிய என்ஜினை கொண்ட வாகனமா? அல்லது டீசல் என்ஜினை கொண்ட வாகனமா? அல்லது சிஎன்ஜி வாகனமா? அல்லது எலக்ட்ரிக் வாகனமா? என்பதை ஒவ்வொரு வாகன ஓட்டியும் ஸ்டிக்கர் மூலம் தெரிவிக்க வேண்டும். டீசல் வாகனம் என்றால் ஆரஞ்சு நிற ஸ்டிக்கரும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களில் இளம் நீல நிற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
இவை தவிர்த்த, மற்ற எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களில் கிரே நிறத்திலான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஸ்டிக்கரில் வாகனத்தின் ஆர்டிஓ பதிவெண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் சேசிஸ் எண் உள்ளிட்ட விபரங்களும் இருக்க வேண்டும். கார்கள் உள்ளிட்ட 4-சக்கர வாகனங்களில் முன்பக்க விண்ட்ஷீல்டில் இந்த ஸ்டிக்கரை எல்லாரும் பார்க்கும் வகையில் ஒட்ட வேண்டும்.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் இந்த விதிமுறை 2019இல் இருந்தே அமலில் இருந்தாலும், தற்போதுதான் இது தலைநகர் டெல்லியில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இவ்வாறான ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனம் சாலையில் பயன்படுத்தப்பட்டால், அதன் வாகன ஓட்டிக்கு இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.5,000 அபராதம் விதிக்க டெல்லி போக்குவரத்து துறை ஆணை பிறப்பித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில வருடங்களாக அமலில் இருந்தாலும், வாகன ஓட்டிகளால் முறையாக பின்பற்றப்படாத சட்டங்களுள் இந்த ஸ்டிக்கர் விதிமுறையும் ஒன்றாகும். தற்போது இதற்கு அபராதம் விதிக்க துவங்கியுள்ளதால், இதனை வரும் காலங்களில் வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றுவார்கள் என்பது உறுதி. ஆனால் தற்போதைக்கு இது தலைநகர் டெல்லியில் மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இந்த சட்டம் கடுமையாக்கப்பட இன்னும் சில காலம் ஆகும்.


Click it and Unblock the Notifications








