ஏர்போர்ட் போன்று ஹெலிபோர்ட்... டெல்லியில் திறக்கப்படுகிறது!
நாட்டிலேயே முதல்முறையாக விமான நிலையம் போன்று, ஹெலிபோர்ட் எனப்படும் ஹெலிகாப்டர்களுக்கான பிரத்யேக நிலையம் டெல்லியில் திறக்கப்பட உள்ளது.
தலைநகர் டெல்லி உள்பட வட இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு ரயில், பஸ் மற்றும் பயணிகள் வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், விரைவாக சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், வட இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்காக, விமான நிலையம் போன்றே ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு பிரத்யேக ஹெலிகாப்டர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 28ந் தேதி இந்த புதிய ஹெலிகாப்டர் நிலையம் திறப்பு விழா காண இருக்கிறது. ஏர்போர்ட் போன்று ஹெலிபோர்ட் என்று இந்த ஹெலிகாப்டர் நிலையம் குறிப்பிடப்படுகிறது.

வட மேற்கு டெல்லியில் உள்ள ரோஹினி என்ற இடத்தில் இந்த ஹெலிபோர்ட் அமைக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் முதல் ஹெலிபோர்ட்டிற்கு 'ரோஹினி ஒன்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த ஹெலிபோர்ட்டில் மொத்தம் 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டமைப்பு வசதி உள்ளது. இந்த ஹெலிபோர்ட்டிலேயே ஹெலிகாப்டர்களுக்கான பராமரிப்பு மையம், பழுதுநீக்கும் மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஹெலிபோர்ட்டில் ஒரே நேரத்தில் 150 பயணிகளை கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. இந்த ஹெலிபோர்ட் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஹெலிகாப்டரில் ஏற வரும் பயணிகளுக்காக தனி கார் பார்க்கிங் வளாகமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான பவன் ஹேன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் இந்த ஹெலிபோர்ட்டை அமைத்து, ஹெலிகாப்டர்களை இயக்க இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் சேவை ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

டெல்லியில் இருந்து ஷிம்லா, ஹரித்வார், டேராடூன், மதுரா, ஆக்ரா சுற்றுலா இடங்களுக்கும், மீருட், மானேசர் மற்றும் பஹதுர்கர் உள்ளிட்ட தொழிற்துறை பகுதிகளுக்கும் ஹெலிகாப்டர் சேவையை துவங்க இருப்பதாக பவன் ஹேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி விமான நிலையம் அதிக விமான போக்குவரத்து இருப்பதுடன், ஹெலிகாப்டர் சேவையை துவங்குவதற்கு அங்கு போதிய இடவசதி இல்லாததால், தனியாக ஹெலிபோர்ட்டை அமைத்துள்ளதாக பவன் ஹேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சேவை சுற்றுலாப் பயணிகளுக்கும், தொழில்துறையினருக்கும் வரப்பிரசாதமாக அமையும். விரைவாக சுற்றுலா தலங்களை சென்றடையவும், திரும்பவும் வாய்ப்பாக இருக்கும். மேலும், சுற்றுலா தலங்களை வானிலிருந்து கண்டு களிக்கவும் இது வழியை ஏற்படுத்தும்.
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








