உண்மையை போட்டுடைத்த பைக் திருடன்... கண்ட்ரோல் பண்ண முடியாம விழுந்து விழுந்து சிரித்த போலீஸ்காரர்கள்
டூவீலர்களை திருடிய கொள்ளையன் உண்மையை போட்டு உடைத்ததால், போலீஸ்காரர்கள் கண்ட்ரோல் பண்ண முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இந்தியாவில் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. புதுப்புது டெக்னிக்குகள் மூலமாக கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவதால், வாகனம் திருடு போய் விடுமோ? என்ற அச்சம் அவற்றின் உரிமையாளர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக விலை உயர்ந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள், அவற்றை கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்கின்றனர்.

எனினும் கொள்ளையர்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதற்காகவே வாகனங்களை கொள்ளையர்கள் திருடுகின்றனர். திருடப்படும் வாகனங்களை கொள்ளையர்கள் கள்ள மார்க்கெட்டில் அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்து காசு பார்க்கின்றனர்.

வாகன திருட்டு சம்பவங்களுக்கு இதை தவிர வேறு காரணம் எல்லாம் இருக்கவே இருக்காது. ஆனால் டெல்லி பகுதியில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். வாகனங்களை திருடியது ஏன்? என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன வித்தியாசமான காரணம்தான் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது.

டெல்லி துவாரகா பகுதியில், கடந்த சில நாட்களாக வாகனங்கள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள்தான் அதிகமாக கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர்.

இரு சக்கர வாகனங்கள் மட்டும் கொள்ளையடிக்கப்படுவது ஏன்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சூழலில், துவாரகா பகுதியில் கொள்ளையர்கள் இருப்பதாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது 1.80 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையுடைய ஒரு பைக்கில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லை. இதனால் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் நிறுத்தப்பட்டனர். விசாரணையில் டூவீலர்களை திருடியது அவர்கள்தான் என்பது தெரியவந்தது.

அவர்களின் பெயர் லலித் மற்றும் சஹித். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இதில், லலித்தான் டூவீலர் திருட்டிற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். வாட்டர் பிளாண்ட்டில் வேலை செய்து வரும் லலித் 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு காதலி உள்ளார். அவருடன் அவ்வப்போது பார்ட்டிகளுக்கு செல்வது லலித்தின் வழக்கம் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் அந்த தினம்தான் லலித்தை வாகன கொள்ளையனாக மாற்றியுள்ளது. லலித்திடம் சொந்தமாக மோட்டார்சைக்கிள் இல்லை. லலித்தின் காதலி கடந்த காதலர் தினத்தன்று இதை குறிப்பிட்டு கேலி பேசியுள்ளார். இதனால் லலித் மனம் உடைந்து போனார்.

காதலியின் கேலி பேச்சுக்களால் மனம் வெதும்பிய லலித், தன்னிடம் நிறைய மோட்டார்சைக்கிள்கள் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். இந்த முடிவில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால் அதற்காக அவர் தேர்ந்து எடுத்த வழிதான் அவருக்கு தற்போது பிரச்னையை உண்டாக்கியுள்ளது. காதலியின் கேலி பேச்சுக்களை தனது நண்பரான சஹித்திடம் லலித் கூறியுள்ளார்.

மேலும் இதற்காக நாம் இருவரும் சேர்ந்து டூவீலர்களை திருடலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு சஹித் ஒப்புக்கொள்ளவே இருவரும் வாகன கொள்ளையர்களாக மாறியுள்ளனர். ஆனால் நல்ல வேளையாக அவர்கள் தற்போது போலீசில் சிக்கி கொண்டுள்ளனர். தங்களுடைய குற்றத்தை அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுதவிர ஹோண்டா ஆக்டிவா உள்பட இன்னும் 7 டூவீலர்களை திருடிய தகவலையும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஓட்டி வந்த பைக்குடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக எட்டு டூவீலர்களை அவர்கள் திருடியுள்ளனர். காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக, நண்பனுடன் சேர்ந்து டூவீலர்களை திருடிய கொள்ளையன் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர்கள் லலித், சஹித் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வாகனங்களை பாதுகாக்க வேண்டும் என்றால், எச்சரிக்கையாக இருங்கள். காரை நிறுத்தி விட்டு வெளியே செல்வதாக இருந்தால், மறக்காமல் டோர்களை லாக் செய்து விடுங்கள்.

டோர் நன்றாக லாக் செய்யப்பட்டு விட்டதா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை செக் செய்து கொள்ளுங்கள். ஒரு சிலர் சாவியை வாகனத்திலேயே மறந்து வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இது கொள்ளையர்களின் பணியை இன்னும் எளிதாக்கி விடும். எனவே எங்கு சென்றாலும் வாகனத்தில் இருந்து சாவியை மறக்காமல் எடுத்து சென்று விடுங்கள்.

அதேபோல் கார் என்றாலும், விண்டோக்களையும் மறக்காமல் மூடி விடுங்கள். இதன் மூலம் காருக்கு உள்ளே இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதையும் தவிர்க்கலாம். அத்துடன் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்துங்கள். இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications








