டேங்கர் லாரி ஓட்ட லைசன்ஸ் வைத்திருக்கும் 24 வயது பெண்!! தடுத்து நிறுத்தி பல்ப் வாங்கிய வாகன துறை அதிகாரிகள்
இந்தியாவில் கனரக வாகனங்களை ஓட்டுவது என்பது கடினமான காரியமாகும். பொதுவாக இத்தகைய ட்ரக் வாகனங்களை அனுபவமிக்க ஆண்களே ஓட்டுகின்றனர்.

ஆனால் வெளிநாடுகளில் பெண் லாரி ஓட்டுனர்களும் பரவலாக இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் பெண் ஓட்டுனர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். அத்தகையவர்களுள் ஒரு பெண் லாரி ஓட்டுனரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
Image Courtesy: CRUX
கேரளா, திருச்சூரை சேர்ந்த 24 வயது பெண் டெலிஷா டேவிஸ். லாரி உள்பட கனரக வாகனங்களை ஓட்ட பயிற்சி பெற்றுள்ள இவர் இந்த விஷயத்தினாலேயே சுற்றுவட்டார பகுதிகளில் பிரபலமானவராக விளங்கி வருகிறார்.

எம்.காம் பட்டதாரியான டெலிஷா டேவிஸ் சிறு வயதிலேயே இருசக்கர வாகனங்கள் மற்றும் 4-சக்கர வாகனங்களை ஓட்ட பழகி கொண்டவர். அவற்றை காட்டிலும் கூடுதல் சவாலான பயணத்தை பெற விரும்பியவருக்கு லாரி ஓட்ட கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இளம்பெண் ஒருவர் இவ்வாறான கனரக வாகனங்களை கற்றுக்கொண்டு ஓட்ட பழகினால் நம் அனைவரது வீட்டிலும் ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. ஆனால் இங்கு டெலிஷாவின் தந்தை பிஏ டேவிஸ் அவருக்கு முழு சுதந்திரத்தையும், அனுமதியையும் வழங்கியுள்ளார்.

பிஏ டேவிஸ் கிட்டத்தட்ட 42 வருடங்களாக எரிபொருள் ஏற்றி செல்லும் லாரிகளை இயக்கி வருகிறார். டெலிஷாவால் இத்தகைய பணியினை நிச்சயம் மேற்கொள்ள முடியும் என அவர் உறுதியாக உள்ளார். தந்தையின் டேங்கர் லாரியை 3 வருடங்களாக டெலிஷா டேவிஸ் ஓட்டி பார்த்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரியை இவர் ஓட்டி சென்றப்போது மோட்டார் வாகன துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பின்பே இணையத்தில் பிரபலமானார். நிச்சயம் இது பெரிய குற்றமாக இருக்க போகிறது என டெலிஷாவை அந்த சமயத்தில் விசாரிக்க துவங்கிய அதிகாரிகளிடம், டெலிஷா தனது கனரக வாகன ஓட்டுனர் உரிமத்தை நீட்டியவுடன் அங்கிருந்த அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.

கேரளாவில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு முறையான லைசன்ஸ் பெற்ற ஒரே பெண்மணி டெலிஷா டேவிஸ் மட்டுமே ஆகும். எனது கதை வாகனம் ஓட்ட பயப்படும் பெண்களுக்கு ஒரு உந்துதலாக இருக்க வேண்டும் என மோட்டார் வாகன துறை அதிகாரிகள் எனது ஆர்வத்தை வாழ்த்தி, ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தனர் என டெலிஷா கூறியுள்ளார்.

மேலும் நான் இந்த டேங்கர் லாரியை ஓட்டுவதை கடந்த 3 வருடங்களாக யாரும் பார்த்து இவ்வாறு மோட்டார் வாகன துறைக்கு புகார் அளிக்காதது எனக்கு ஆச்சிரியமாக உள்ளது எனவும் கூறினார். ஏனெனில் கடந்த மூன்று வருடங்களாக டெலிஷா கொச்சியில் இருந்து கேரளாவின் பிற பகுதிகளான திரூர், மலப்புரத்திற்கு இதே டேங்கர் லாரியில் எரிபொருளை எடுத்து சென்றுள்ளார்.

டெலிஷா டேங்கர் லாரி ஓட்டுவதை தனது 16 வயதிலேயே கற்று கொண்டுள்ளார். ஆனால் 18 வயது நிரப்பினால் தான் லைசன்ஸை பெற முடியும் என்பதால், அதுவரையில் எந்தவொரு கனரக வாகனத்தையும் டெலிஷா சாலையில் ஓட்டி செல்ல அவரது தந்தை அனுமதிக்கவில்லை.


Click it and Unblock the Notifications