சூப்பர் பிளான்... மோசமான சாலைகளை சீரமைக்க வருகிறது லேட்டஸ்ட் டெக்னாலஜி... என்னனு தெரியுமா?
இந்தியாவில் மோசமான சாலைகளை சீரமைக்க லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை பயன்படுத்தும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்களால் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுகிறது. அது உண்மைதான்.

இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதே கிடையாது. செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறி செல்வது, குடி போதையில் வாகனம் ஓட்டுவது, தலை கவசம் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது என ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதிமீறலை செய்து கொண்டேதான் உள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு மிக கடுமையாக உயர்த்தியது. ஆனால் இந்த நடவடிக்கை மட்டும் போதாது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதற்கு வாகன ஓட்டிகளை மட்டும் குறை கூறி கொண்டே இருக்க முடியாது. இங்குள்ள மோசமான சாலைகளும் விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகள் காரணமாக நடந்த விபத்துக்களில், தினமும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

2019ம் ஆண்டுக்கான தரவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில்தான் இருந்து வருகின்றன. சாலைகளை அமைப்பதற்கு டெண்டர் விடுவதில் இருந்து பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவதாக நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன. எனினும் அந்த புகார்கள் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இதனால் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தரமற்ற சாலைகள்தான் போடப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் சாலை அமைக்கப்பட்ட உடனேயே பழுதாகி விடுகிறது. இன்னும் சில சாலைகள் ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிப்பதில்லை. எனவே மோசமான சாலைகளையும் விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணியாக பார்க்க வேண்டியுள்ளது.

இந்த சூழலில், குண்டும், குழியுமான சாலைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக, மொபைல் அப்ளிகேஷன் (Mobile Application) அல்லது போர்ட்டல் (Portal) ஒன்றை உருவாக்கும் படி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திற்கு, பாராளுமன்ற குழு தற்போது பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் குண்டும், குழியுமான சாலைகளை உரிய நேரத்தில் சீரமைப்பதை உறுதி செய்யும் வகையிலான செயல்முறைகளை அமலுக்கு கொண்டு வரும்படியும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் நிலைக்குழுவும் மோசமான சாலைகள் தொடர்பாக கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான தரத்தில் இருப்பது குறித்து நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. எனவே நாட்டில் சாலைகளின் நிலைமைகளை கண்காணிப்பதற்கு லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்படியும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் கட்டுமான பணிகள் நடந்து வரும் சாலைகள் மற்றும் பராமரிப்பின் கீழ் உள்ள சாலைகளை, அந்த பணிகளின் பல்வேறு கட்டங்களில் தர ஆய்வு செய்வதற்கும் மற்றும் பணிகள் முடிந்த பிறகு தர ஆய்வை மேற்கொள்வதற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








