தர்மபுரி- ஓசூர் இடையே புதிய 4 வழிச்சாலை அமைகிறது... பயண தூரம் குறைகிறது
தர்மபுரி - ஓசூர் இடையே ரூ.2,000 கோடியில் புதிய 4 வழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலைத் திட்டம் மூலமாக சேலம் - பெங்களூர் இடையிலான பயண தூரமும், நேரமும் குறைய இருக்கிறது. இந்த திட்டத்திற்கான முன்திட்டப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

சேலத்திலிருந்து ஓசூர் மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையானது தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக செல்கிறது. சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி வரை நான்கு வழிச்சாலையாகவும், கிருஷ்ணகிரி - ஓசூர் இடையில் ஆறு வழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையிலிருந்து வரும் தங்க நாற்கர சாலையும், சேலத்திலிருந்து வரும் நான்கு வழிச்சாலையும் கிருஷ்ணகிரியில் ஒன்று சேர்கின்றன. இதனால், கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் மற்றும் பெங்களூர் வரை நெடுஞ்சாலையில் எப்போதுமே வாகன நெரிசல் மிக அதிகமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்திலிருருந்து ஓசூர் வழியாக பெங்களூர் மற்றும் வடநாட்டுக்கு செல்லும் கார், பஸ், டிரக்குகள் இந்த சாலையை பயன்படுத்துவதால், பெரும் வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது.

இந்த நிலையில், சேலத்திலிருந்து ஓசூர் மற்றும் பெங்களூர் நகரங்களை விரைவாக சென்றடையும் வகையில், புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முதல்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்காக, தர்மபுரியிலிருந்து ஓசூருக்கு பாலக்கோடு மற்றும் ராயக்கோட்டை வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 844 சாலையானது நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் ரூ.2,061 கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

முதல்கட்டமாக பெங்களூர், எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள நெரலரு என்ற இடத்தில் இருந்து ஓசூர் அருகில் உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். இரண்டாவது கட்டமாக தொரப்பள்ளி அக்ரஹாரத்திலிருந்து ஜித்தன்டஹள்ளி வரையிலும், மூன்றாவது கட்டமாக ஜித்தன்டஹள்ளியிலிருந்து தர்மபுரி வரையிலும் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.

இந்த நான்கு வழிச்சாலை மூலமாக சேலம் - ஓசூர் இடையிலான பயண தூரம் 25 கிலோமீட்டர் வரை குறையும். அத்துடன், கிருஷ்ணகிரி- ஓசூர் இடையிலான சாலையில் வாகன நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு ஏற்படுவதுடன் பயண நேரமும், எரிபொருள் செலவும் குறிப்பிடத்தக்க அளவு மிச்சமாகும்.

ஓசூர் நகரின் வெளிவட்டச் சாலை வழியாக இந்த நான்கு வழிச் சாலை செல்வதால், பெங்களூரிலிருந்து சேலம் செல்வோருக்கு மிகுந்த சவுகரியமாக அமையும். கிருஷ்ணகிரியை சுற்றிக் கொண்டு தர்மபுரி செல்ல வேண்டியிருக்காது. மேலும், இந்த சாலையில் அமைந்துள்ள பாலக்கோடு மற்றும் ராயக்கோட்டை நகரங்கள் பொருளாதார ரீதியில் பலன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் 550 ஹேக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறைகளும் விரைவில் துவங்க உள்ளன. இந்த திட்டத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி - ஓசூர் இடையிலான ஆறு வழிச்சாலையும் தரம் உயர்த்தும் திட்டம் கையில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: TOI


Click it and Unblock the Notifications








