'பொல்லாதவன்' தனுஷாக மாறிய தர்மபுரி இளைஞர்... போலீஸ் உதவியின்றி திருடப்பட்ட பைக் மீட்பு...
'பொல்லாதவன்' படத்தில் தனுஷுக்கு அரங்கேறியதைப் போன்றே தர்மபுரியைச் சேர்ந்த ஓர் இளைஞரின் நிஜ வாழ்க்கையிலும் பைக் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதிலும், அந்த இளைஞர் போலீஸாரின் உதவியின்றியே தனது பைக்கை மீட்டுள்ளார். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

தனுஷ் நடித்த பிரபல திரைப்படங்களில் ஒன்று 'பொல்லாதவன்'. இந்த படம் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். படத்தில் தனுஷ் நீண்ட நாள் கனவாக பல்சர் பைக்கை வாங்குவார். அதனை, வில்லன் தரப்பில் இருக்கும் நபர்கள் திருடிவிட்டு கொலை மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்துவர்.

தன்னுடைய பைக் காணாமல் போய்விட்டதைப் போலீஸாரிடம் தனுஷ் புகாராக தெரிவிக்க, காவல்துறையினர் பெரியளவில் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதை திரைப்படத்தில் நம்மால் காண முடியும். பின்னர், தனுஷ் அவரின் நண்பர்களைக் கொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளின் மூலம், அவரின் ஆசை பைக் மீட்கப்படும்.

தற்போது, இதேபோன்றதொரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்திலும் பைக்கை இழந்த இளைஞர், போலீஸாரின் உதவியின்றியே வாகனத்தை மீட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலைக்கீழே காணலாம்.

நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவத்திலும் பல்சர் பைக்கே திருடப்பட்டுள்ளது. இந்த பைக்கின் உரிமையாளாரான சந்தோஷ், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகின்றார். இவர், பொங்கல் பண்டியைகையை முன்னிட்டு சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்ட பல்சர் வேறொருவர் இயக்குவதாக அவருக்கு குறுஞ்செய்திகள் செல்லத் தொடங்கியுள்ளது.
இது எப்படி சாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்... ஆம், சந்தோஷ் தனது பல்சர் பைக்கில் ஜிபிஎஸ் எனும் கருவியைப் பொருத்தியுள்ளார்.

அது பொருத்தப்பட்ட வாகனம் குறிப்பிட்ட இலக்கைத் தாண்டிச் செல்லும்போதோ அல்லது உரிமையாளர் அல்லாத வேறு நபர்கள் வாகனத்தை எடுக்கும்போது குறுஞ்செய்தி மூலம் தகவலை அனுப்பும்.
மேலு, நேரடியாக பைக் இருக்கும் இடத்தை டிராக் செய்யவும் உதவும். இத்தகைய கருவியைதான் சந்தோஷ், தனது பல்சர் பைக்கில் பொருத்தியுள்ளார். இந்த கருவியே போலீஸின் உதவியின்றி திருடப்பட்ட பைக்கை கண்டுபிடிக்க சந்தோஷுக்கு உதவியுள்ளது.

சந்தோஷ் தர்மபுரியில் இருந்தபோது, கடந்த 18ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பைக் திருடப்பட்டதற்கான அவசரகால குறுஞ்செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சந்தோஷ், தனது வாகனம் எங்கெல்லாம் எடுத்துச் செல்லப்படுகின்றது என்பதனை இருந்த இடத்தில் இருந்தே நோட்டமிட்டுள்ளார்.

ஊர் ஊராக சுற்றித் திரிந்த அந்த பைக் கடைசியாக மைலாப்பூரில் உள்ள அபிராமபுரம் பகுதியில் நிறுத்தப்பட்டது. அப்போது ஜிபிஎஸ் கருவியின் மற்றுமொரு வசதியான 'எமர்ஜென்சி ஆஃப்' அம்சத்தை ஆன் செய்து பைக்கை இருந்த இடத்திலேயே முடக்கினார். இது, பைக்கை மேற்கொண்டு இயக்க முடியாமல் தடுக்க உதவும். இதனை, ஓடிபி பாஸ்வேர்டு மூலம் அவர் செய்துள்ளார்.

தொடர்ந்து, மறு நாள் ஊரிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட சந்தோஷ் இதுகுறித்து 100 என்ற அவசர எண்ணை தொடர்புகொண்டு போலீஸாரிடம் முறையிட்டார். இதையடுத்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின்மூலம் திருட்டுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், பைக்குகளை திருடியது கோட்டூர்புரத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் நாகராஜ் என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவர் மீதும் புகாரளிக்கும் விதமாக சந்தோஷ் அபிரமாபுர காவல்நிலையத்தை நாடியுள்ளார். தனக்கு நேர்ந்த துயரம் மற்றவர்களுக்கு நிகழக்கூடாது என்ற நோக்கில் காவல்நிலையத்திற்கு சென்ற சந்தோஷுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
புகாரளிக்கச் சென்ற சந்தோஷை, "பைக் கிடைத்துவிட்டதல்லவா, புகார் எதற்கு கிளம்பு" என மிரட்டும் தோனியில் போலீஸார் விரட்டியுள்ளனர்.

தொடர்ந்து, பைக் திருடப்பட்டது சைதாப்பேட்டை காவல்நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதி, அங்குச் சென்று புகார் அளியுங்கள் எனவும் கூறியுள்ளனர். சைதாப்பேட்டை காவல்நிலையத்துக்கு சென்ற சந்தோஷிடம், "வண்டியை ஸ்டேஷனிலேயே விட்டுச் செல், ஓரிரு மாதத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டு பைக்கை ஒப்படைக்கின்றோம்" என கூலாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பைக்கைத் திருடியவர்கள் கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்கும்படியும் என தட்டிக்கழித்துள்ளனர். இருப்பினும், விடா முயற்சியுடன் சந்தோஷ் அங்கேயும் சென்றுள்ளார். ஆனால், அங்கேயும் வழக்கு பதிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி கோட்டூர்புர காவல்நிலைய அதிகாரிகள் சிலர் குற்றவாளிகளுக்கு சாதகமாக பேசுவதைப்போன்று கருத்து தெரிவித்ததாக சந்தோஷ் வருத்தம் தெரிவித்தார்.

இதனால், தன்னுடைய திருடப்பட்ட பைக் கிடைத்தும் சந்தோஷிடம் சந்தோஷமின்றியே காணப்பட்டுள்ளது.
இதுபோன்று காணமல்போன வாகனத்தை ஜிபிஎஸ் உதவியுடன் கண்டுபிடிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியுள்ளன.

சந்தோஷ் மட்டுமின்றி ஏராளமானோர்க்கும் ஜிபிஎஸ் கருவியே அவர்களின் காணாமல் போன வாகனங்களை மீட்க உதவியாக இருந்துள்ளது. இது, சந்தையில் ரூ. 2 ஆயிரம் முதலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனை வாங்கி வாகனங்களில் பொருத்துவதன் மூலம் நம்முடைய விலையுயர்ந்த வாகனங்கள் திருடப்படுவதை தடுப்பதுடன், வாகனத்தை நேரடியாக டிராகா் செய்யவும் முடியும்.
Source: Polimer


Click it and Unblock the Notifications








