2 மாதம் கூட முழுசா முடியல!! வந்தே பாரத் இரயிலுக்கு பழைய என்ஜின் - பிரதமர் துவங்கி வைத்த இரயில் சேவை ஆச்சே!!
கர்நாடகாவில் சேவை துவங்கப்பட்டு 2 மாதங்கள் கூட இன்னும் முழுமையாக முடியாத நிலையில், தார்வட் வந்தே பாரத் இரயில் பழைய இரயில் என்ஜின் மூலம் இழுத்து செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவையும், தார்வட் வந்தே பாரத் இரயில் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
வந்தே பாரத் இரயில் சேவைகள் நாடு முழுவதும் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நமது தமிழ்நாட்டில் கூட சென்னையில் இருந்து பெங்களூருக்கு தினந்தோறும் வந்தே பாரத் இரயில்கள் சென்று வருகின்றன. இதேபோன்று சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் இரயில் சேவைகளை துவங்கும் முனைப்பில் தெற்கு இரயில்வே உள்ளது.

இதற்கிடையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி, கர்நாடகா மாநிலத்தில் தார்வட் - பெங்களூர் இடையே வந்தே இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். தினமும் மதியம் 1.15 மணியளவில் தார்வட் இரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை துவங்கும் இந்த வந்தே பாரத் இரயில் 7 மணிநேர பயணத்திற்கு பின் பெங்களூரை இரவு 8 மணியளவில் அடைகிறது.
மற்ற வந்தே பாரத் இரயில் சேவைகளை போல் தார்வட்- பெங்களூர் வந்தே பாரத் இரயில் சேவையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் துவங்கி வைத்தனர். ஆனால் சேவை துவங்கப்பட்டு 2 மாதங்கள் கூட இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், தார்வட் வந்தே பாரத் இரயில் செயல்படாமல் நின்றுள்ளது. இதன் காரணமாக வந்தே பாரத் இரயிலை டபிள்யூ.ஏ.ஜி-7 என்ஜின் மூலமாக இழுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். இந்த வீடியோ பெங்களூருக்கு அருகே உள்ள தும்குர் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் இரயில்கள் பிரபலமானதற்கு காரணமே அவற்றின் அதிகப்படியான வேகம் ஆகும். ஆனால், டபிள்யூ.ஏ.ஜி-7 இரயில் என்ஜின் பொருத்தப்பட்டு, மீட்கப்பட்ட இந்த குறிப்பிட்ட வந்தே பாரத் இரயிலை வழக்கத்தை காட்டிலும் குறைவான வேகத்தில் கொண்டு சென்றிருப்பதை வீடியோவில் காண முடிகிறது.
இதுகுறித்த டுவிட்டர் பதிவில், இந்த இரயில் 100kmph வேகத்தில் வந்தே பாரத் இரயிலை கொண்டு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது, இரயில் அவ்வளவு வேகத்தில் கூட சென்றிருக்காது. அதனினும் குறைவான வேகத்திலேயே சென்றிருக்கும். சந்தோஷ் குமார் என் என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவிற்கு கீழ், தென்மேற்கு இரயில்வே என்ற டுவிட்டர் கணக்கில் இருந்து கமெண்ட் செய்யப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது, "வந்தே பாரத் இரயில் டிராக்ஷன் கண்ட்ரோல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறால், பயணிகளுக்கு சிரமத்தை தவிர்க்க லோகோ என்ஜின் பெட்டியால் இழுத்து செல்லப்பட்டது. தாமத்தை குறைப்பதற்காக இந்த லோகோ வழங்கப்பட்டு உள்ளது". இவ்வாறு, வந்தே பாரத் இரயில் ஒன்று பழமையான இரயில் என்ஜின் மூலம் இழுத்து செல்லப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுதான், இவ்வாறு நடப்பது ஒன்றும் முதல்முறை அல்ல. ஏற்கனவே இதேபோன்றதான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தார்வட் வந்தே பாரத் இரயிலை பெரிய பிரச்சனையில் இருந்து பாதுகாக்க, இவ்வாறு அதிகாரிகள் செய்திருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும், இரயிலுக்கு வெளியே இருந்து பார்க்கும் மக்களுக்கு வந்தே பாரத் இரயில் செயலிழந்ததால், அதனை பழமையான இரயில் என்ஜின் கொண்டு இயக்குவதாகவே தோன்றும்.


Click it and Unblock the Notifications








