தரமான அறிவிப்பு! ஃபேம்2 சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தது மத்திய அரசு...
மத்திய அரசு ஃபேம்2 சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஓராண்டு வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்த திங்கள் அன்று ஃபேம்-2 திட்டத்தினை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆகையால், தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஃபேம்-2 திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு ஃபேம்-2 திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மின் வாகன பயன்பாட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.

இந்த சிறப்பு திட்டத்தையே அடுத்த ஓராண்டிற்கு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால், கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மானியம் பெறுவதற்கு தகுதியான நிறுவனம் என்ற சான்றை அனைத்து மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் 2021 நிதியாண்டிலும் தகுதியானவர்களாக மாறியுள்ளனர்.

இந்திய அரசு ஃபேம்2 திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமே மானியத்தை வழங்கி வருகின்றது. உள் நாட்டு உற்பத்தி மற்றும் மின் வாகனத்தின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மானியத்தை வழங்கி வருகின்றது மத்திய அரசு.

இந்த மானியத்தை பெற வேண்டுமானால் மின் வாகனம் மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்திற்கு தகுதியானது என்ற சான்றினை பெற வேண்டும் என்பது கட்டாயம். அவ்வாறான சான்றை கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் பெற்ற வாகன உற்பத்தியாளர்களே தொடர்ந்து மானியம் பெற தகுதியானவர்களாக மாறியிருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் சான்றை புதுப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஃபேம்-2 திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சார வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிப்பதற்காக இந்த மொபெரும் தொகையில் இருந்தே மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மானியம் பெற தகுதியான நிறுவனங்களாக உள்ள நிறுவனங்கள் சில; ஏத்தர் எனர்ஜி, ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினவா ஆட்டோ டெக், ஆம்பியர், ரிவோல்ட் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் ஆகியவை ஆகும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, மானியம் பெற தகுதியானவர்கள் என்ற சான்றை பெற்றிருக்கும் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கின்றன. மின்சார வாகன பிரியர்கள் சார்பிலும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








