சிஎஸ்கே-வுக்கு போட்டியா புதிய அணியை வாங்குகிறாரா டோனி? ஒட்டுமொத்த இந்தியாவும் இப்ப இதை பத்திதான் பேசுது!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மறக்க முடியாத ஒரு பெயர் எம்.எஸ். டோனி (MS Dhoni). சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட எம்.எஸ். டோனி தற்போது ஐபிஎல் (IPL - Indian Premier League) கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK - Chennai Super Kings) அணிக்காக டோனி விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறி விட்டது. லீக் சுற்றின் கடைசி போட்டியில் ஆர்சிபி என அழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB - Royal Challengers Bengaluru) அணியிடம் தோல்வியடைந்த காரணத்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் (Playoffs) வாய்ப்பை தவற விட்டது. இதனால் டோனியின் ஐபிஎல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

டோனிக்கு தற்போது 42 வயதாகி விட்டது. நிறைய காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். எனவே 2025 ஐபிஎல் தொடரில் டோனி விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான். அடுத்த ஐபிஎல் தொடரில் டோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பதுதான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இந்த சூழலில், டோனியின் ஒரு ஃபேஸ்புக் பதிவு, ரசிகர்கள் மத்தியில் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டோனி ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பதிவுகளை செய்யக்கூடியவர். இந்த வரிசையில் இன்று (மே 22) மதியம் டோனியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: ஒரு பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான நேரம் வந்து விட்டது. எது முக்கியமோ, அதை செய்வதற்கான நேரம் வந்து விட்டது. நான் எனது சொந்த அணியை உருவாக்க போகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன் கோப்பை ஒன்றின் எமோஜி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் டோனி ஐபிஎல் தொடரில் புதிய அணியை வாங்க போகிறாரா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அந்த அணி இருக்குமா? என ரசிகர்கள் அனைவரும் பரபரப்பாக பேசி கொண்டுள்ளனர். ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் இல்லை. அனேகமாக இது விளம்பர பதிவாக இருக்கலாம்.
சிட்ரோன் (Citroen) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துடன் இணைந்துதான், டோனி இந்த பதிவை செய்துள்ளார். சிட்ரோன் என்பது இந்தியாவில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் ஒரு கார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர்-ஆக (Brand Ambassador) டோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. எனவே சிட்ரோன் நிறுவனத்துடன் இணைந்து எதிர்காலத்தில் செய்யவுள்ள ஏதாவது ஒரு விஷயத்தைதான் டோனி இப்படி சூசகமாக கூறியிருப்பார் என நாங்கள் கருதுகிறோம். ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுவதற்காக இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம். எனவே அவர் ஐபிஎல் தொடரில் புதிய அணியை வாங்குவதற்கான வாய்ப்புகள் தற்போதைய நிலையில் மிகவும் குறைவு.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டோனியின் ஃபேஸ்புக் பக்கம் விளம்பர பதிவுகளால் நிரம்பி வழிகிறது. எனவே இது விளம்பரம் சம்பந்தப்பட்ட பதிவாக இருக்கும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இவ்வாறு வித்தியாசமான ஒரு பதிவை செய்திருக்கலாம்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விட்டது. சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சி3, இசி3 (எலெக்ட்ரிக் கார்), சி3 ஏர்க்ராஸ், சி5 ஏர்க்ராஸ் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) என்ற கார் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும். அனேகமாக இந்த கார் சம்பந்தப்பட்டதாக இந்த பதிவு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உண்மையில் இந்த பதிவு எதற்காக? என்பது கூடிய விரைவில் நமக்கு தெரிந்து விடும். அதுவரை பொறுமையாக காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications








