ஊழியர்களுக்கு ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர்கள் பரிசு: வியக்க வைத்த வைர வியாபாரி..!
தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் அளிக்கப்படும் போனஸாக ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர்களை பரிசளித்துள்ளார் முதலாளி ஒருவர். அது குறித்த தகவல்களை காணலாம்.
வருடம் முழுவதும் நாயாக உழைத்தாலும் ஆயிரம் ரூபாய் கூட சம்பள உயர்வு கிடைக்கவில்லையே என ஏங்குபவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் வயிற்றெரிச்சலையே தரும்.

வருடத்திற்கு ஒரு முறை ஊழியர்களின் செயல்திறனைப் பொறுத்து ஊதிய உயர்வு கொடுப்பதே நிறுவனங்களின் வாடிக்கை. சிலருக்கு இது கிடைக்காமல் கூட இருக்கலாம் என்பது தனிக்கதை.

இந்நிலையில், தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருடாந்திர ஊக்கத்தொகையாக ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர்களை அளித்து வியக்க வைத்துள்ளார் முதலாளி ஒருவர்.

குஜராத்தில் உள்ள சூரத் நகரம் பட்டுச் சேலைக்களுக்கு புகழ் பெற்றது. ஆனால் இந்த நகரம் வைர வியாபாரத்திற்கும் புகழ் பெற்றது என்பது பலருக்கு தெரியாத தகவல்.

சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி லக்சிதாஸ் வெகாரியா என்பவர் தன் நிறுவனத்தில் பணியுரியும் ஊழியர்கள் 125 பேருக்கு 51,000 ரூபாய் விலை கொண்ட ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர்களை பரிசாக அளித்து வியக்கவைத்துள்ளார்.

வைர நகைகளுக்கு பாலிஷ் போடும் சாதாரண சம்பளம் பெரும் ஊழியர்கள் இவர்கள். முதலாளியின் இந்த செயலால் தற்போது உற்சாகத்தில் திளைக்கின்றனர் இவர்கள்.

இதற்காக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட விழாவில் 125 ஊழியர்களுக்கும் தன் கைகளாளேலே ஸ்கூட்டர் சாவிகளைகொடுத்துள்ளார் லக்சிதாஸ்.

தன் தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக ஸ்கூட்டர்கள் அனைத்திலும் மூவர்ண தேசிய கொடியை இணைத்திருந்தார் லக்சிதாஸ்.

நகை பாலிஷ் செய்பவர்களை சாதாரண ஊழியர்களாக பார்ப்பதில்லை என்றும் அவர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல மதிப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிகரமாக பேசினார் அவர்.

ஊழியர்களின் நலனைப் பற்றி கவலைப்படாத முதலாளிகள் இருக்கக்கூடிய தற்போதைய காலகட்டத்தில் இவரைப் போன்ற மனசு எத்தனை பேருக்கு வரும்?

ஆனால் ஊழியர்களுக்கு பரிசு அளிப்பதில் இவரை பல மடங்கு மிஞ்சிய ஒருவர் அதே சூரத் நகரில் தான் இருக்கிறார்.

சவ்ஜி தோலேகியா என்ற அந்த தொழிலதிபர், ஹரி கிருஷ்னா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

தோலேகியா தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 400 பேருக்கு அபார்ட்மெண்ட் வீடுகளையும், 1,260 பேருக்கு ஃபியட் புன்ட்டோ கார்களையும் கடந்த ஆண்டு தீபாவளி பரிசாக அளித்து திக்குமுக்காட வைத்துவிட்டார்.

இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தோலேகியா சமூக வலைத்தளங்கள் உட்பட தொலைக்காட்சிகளில் ஹீரோவாகவே வர்ணிக்கப்பட்டார்.

தனது பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு அளிக்க இவர் செலவிட்ட தொகை 50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

2014ல் தொடங்கிய இவரின் இந்த வினோத செயல் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகி வருகிறது.

சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு கார்கள், வீடுகள், அபார்ட்மெண்டுகள் மட்டுமல்லாமல் வைர நகைகளையும் பரிசாக அளிப்பதை வழக்கமாக இவர் கொண்டுள்ளார்.

தோலேகியாவின் இரண்டாது வைர தொழிற்சாலையை சமீபத்தில் சூரத் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்ற தங்க மனசு கொண்ட முதலாளிகள் கிடைப்பவர்கள் அதிர்ஷடசாலிகளே..!


Click it and Unblock the Notifications








