எப்படியாவது பதக்கதை வெல்லுங்கள்!! இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு பரிசாக கார், வைர வியாபாரி அறிவித்தார்
ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் வென்றால், வீராங்கனைகளுக்கு கார் அல்லது வீட்டை பரிசாக அளிப்பதாக சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார். இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளி போனஸாக தன்னிடம் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியதன் மூலம் பிரபலமானவர் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரியான சாவ்ஜி தொலகியா.

இவர் தான் தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுவரும் மகளிர் அணியினருக்கு பரிசுகளை அறிவித்துள்ளதன் மூலம் மீண்டும் வைரலாகியுள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், கனவு வீட்டை கட்டிக்கொள்ள ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் ரூ.11 லட்சம் எங்களது ஹரி கிருஷ்ணா க்ரூப்பில் இருந்து வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கடுத்த டுவிட்டர் பதிவில், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்தால், வீட்டிற்கு பதிலாக ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய கார் பரிசாக வழங்கப்படும். இவற்றை மகளிர் ஹாக்கி அணியினரை உற்சாகப்படுத்த வழங்குவதாக சாவ்ஜி தொலகியா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் இம்முறை இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நம் ஹாக்கி வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் முதல்முறையாக அரையிறுதிக்கு சென்றனர்.

அரையிறுதியில் இந்திய ஹாக்கி வீராங்கனைகளும், பலம் பெற்ற அர்ஜெண்டினா மகளிர் ஹாக்கி அணியினரும் நேருக்கு நேர் சந்தித்தனர். துவக்கத்திலேயே, 2வது நிமிடத்திலேயே இந்திய மகளிர் அணியினருக்கு ஒரு கோல் கிடைத்தது.

அர்ஜெண்டினா வீராங்கனைகள் 18வது நிமிடத்தில் தங்களது முதல் கோலை பதிவு செய்தனர். அதன்பின் இரண்டாவது கோலையும் அவர்கள் போட்டனர். ஆனால் நமது வீராங்கனைகளால் கடைசி வரையில் இரண்டாவது கோலை அடிக்க முடியவில்லை.

இதையடுத்து 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அர்ஜெண்டினாவிடம் தோல்வியை தழுவியது. எனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியினர், வெண்கலத்திற்கான போட்டியில் பிரிட்டனை நாளை (ஆக.6) சந்திக்கவுள்ளனர்.

சாவ்ஜி தொலகியா அர்ஜெண்டினாவுடனான போட்டிக்கு முன்பு, அதாவது முதல்முறையாக மகளிர் ஹாக்கி அணியினர் அரையிறுதிக்கு தகுதி பெற்றதை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த நேரத்தில் அறிவித்தார். ஆனால் அதன்பின் இந்திய அணி துரதிர்ஷ்டவசமாக இறுதி போட்டிக்கு முன்னேறாமல் போனாது.

ஆனால் சாவ்ஜி தொலகியா பதக்கம் என்றே குறிப்பிட்டுள்ளதால், வெண்கல பதக்கத்தை மகளிர் ஹாக்கி அணியினர் வென்றால் கூட போதும். அவர்களுக்கு வீடு அல்லது புதிய கார் உறுதி. பரிசு கிடைக்குமா, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முன்னதாக தொலகியா அவரது பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக கார் வழங்கி இருந்தார் என்று கூறியிருந்தோம் அல்லவா, ஆம் ஆயிரம் கார்களை தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு இந்த வைர வியாபாரி வழங்கி இருந்தார்.

1992ல் சாவ்ஜி தொலகியாவால் நிறுவப்பட்ட வைர விற்பனை கூட்டு நிறுவனமான ஹரி கிருஷ்ணா க்ரூப்பில் ஏகப்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்த குறிப்பிட்ட 1,000 பேர், நிறுவனத்தில் சுமார் 25 வருடங்களாக பணியாற்றுபவர்களாவர்.

அதிலும் முதல் மூன்று பேருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி எஸ்யூவி என்ற லக்சரி கார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வருடம் மட்டுமில்லை, பல வருடங்களாக காரை பரிசாக வழங்குவதை தொலகியா வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த வகையில் 500 ஃபியாட் புண்டோஸ், 1,260 மாருதி & டட்சன் கார்கள் மற்றும் 1,200 டட்சன் ரெடி-கோ கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய ஹாக்கி மகளிர் அணியினர் ஜெய்தால் எந்த மாதிரியான காரை வழங்குவார் என்பது தெரியவில்லை. எந்த நிறுவனத்தின் காரை சாவ்ஜி தொலகியா தருவார் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களது கருத்தை கீழே பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








