ஆசிய கண்டத்தின் மிக நீளமான நெடுஞ்சாலை AH-1 பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
தரைவழியாக ஊர்களையும், நகரங்களையும் இணைப்பதில் மாநில நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தநிலையில், ஆசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளை தரைவழியாக இணைக்கும் விதமாக விளங்குகிறது ஆசிய நெடுஞ்சாலை எண்-1.
ஆம், இது ஆசிய நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளையும் தரை வழியாக இணைக்கும் பாலமாக விளங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? உலகின் மிக நீளமான சாலைகளில் ஒன்றான ஆசிய நெடுஞ்சாலை எண்-1 பற்றிய முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்
ஆசிய நெடுஞ்சாலை எண்-1 என்பதை சுருக்கமாக ஆங்கிலத்தில் AH-1 என்று குறிப்பிடப்படுகிறது. இதனை ஆசிய சூப்பர்ஹைவே-1 என்றும் குறிப்பிடுகின்றனர்.

தலைப்பும், முடிவும்...
ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் துவங்கி, ஆசிய- ஐரோப்பிய எல்லையில் அமைந்திருக்கும் துருக்கியில் முடிவடைகிறது.

நீளம்
ஆசிய நெடுஞ்சாலை எண்-1 பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக மொத்தம் 20,557 கிமீ தூரம் நீள்கிறது. ஆசிய கண்டத்தின் மிக நீளமான சாலை என்ற பெருமையும் இது பெறுகிறது.

ஜப்பானில் மட்டும்...
ஜப்பானில் மட்டும் 1,200 கிமீ தூரம் நீள்கிறது. இதில், 11 சுங்கக் கட்டண சாலைகளும் அடக்கம். கடந்த 2003ம் ஆண்டு ஜப்பான் சாலைகள் இணைக்கப்பட்டன. இவை சீனாவுடன் கப்பல் மூலமாக இணைக்கப்படுகிறது.

இணைப்பு பாலம்
ஜப்பான், கொரியா, சீனா, ஹாங்காங், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் வழியாக துருக்கி மற்றும் பல்கேரியா நாடுகளை இணைக்கிறது. அத்துடன், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளையும் தரைவழியாக இணைக்கும் வாய்ப்பும் கொண்டிருக்கிறது.

இந்தியாவில்...
இந்தியாவில் இம்பால், கோஹிமா, திமாபூர், நாகோன், கவுகாத்தி, ஷில்லாங், தாவ்கி, சில்ஹெட், டாக்கா, கொல்கத்தா, கான்பூர், டெல்லி வரை பயணிக்கிறது.

பொருளாதார பலன்
இந்த சாலை ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சக்தியாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இந்தியர்களின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் தாய்லாந்து நாட்டையும் தரைவழியாக இணைக்க உதவுகிறது.
Picture Credit: Boombsbeat

ஐரோப்பிய நாடுகள்
துருக்கியிலுள்ள இ-80 எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று இந்த ஆசிய நெடுஞ்சாலை - 1 சேர்கிறது. அங்கிருந்து ரோம் உள்ளிட்ட நகரங்களை தரைவழியாக இணைக்கிறது.
Picture Credit:2nified

சுற்றுலா முக்கியத்துவம்
இந்த ஏஎச்-1 நெடுஞ்சாலை இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியிருப்பதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? தாய்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு தரை வழியாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதே! அதாவது, 2014ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவிலிருந்து 9.4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதே தரைவழியாக செல்லும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Picture Credit: Wikimedia Commons

சிறப்பான அனுபவம்
அதாவது, தற்போது நாற்கர சாலை பயணம், இமயமலை பயணம் மேற்கொள்வது போன்றே, கார், பைக்குகளில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல அரிய வாய்ப்பு கிடைக்கும். அதாவது, இயற்கை எழில் கொஞ்சும் சாலைகள், கலாச்சார செழுமை மிகுந்த நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பை இந்த சாலை ஏற்படுத்தும். இது வாழ்நாளில் செல்ல வேண்டிய பயணமாக கார், பைக் உரிமையாளர்களுக்கு அமையும்.
Picture Via: Indiatimes

சாலைப் பணிகள்
மணிப்பூர் மாநிலம், மோரே என்ற இடத்திலிருந்து தாய்லாந்து நாட்டிலுள்ள மே சோட் என்ற இடம் வரையில் மியான்மர் வழியாக சாலை அமைக்கும் திட்டத்திற்கு மூன்று நாடுகளும் இசைந்து பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டில் இந்த சாலை கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Picture Credit: Holidayiq

பயண தூரம்
இந்தியா- தாய்லாந்து இடையில் 3,200 கிமீ நீளம் கொண்ட சாலையில் பயணிப்பது புதிய அனுபவமாகவும், பழமையான கலாச்சார செறிந்த பகுதிகளையும், இயற்கை அழகையும் காணும் பாக்கியத்தையும் வழங்கும். நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்த சாலையில் செல்வதற்கு ஏற்றதாக பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Picture Credit: Roughguides

முக்கிய சுற்றுலாத் தலங்கள்
பிஷ்ணுபூர், சந்தேல், சுரச்சன்பூர், உக்ருல் ஆகிய இடங்களையும், மியான்மர் நாட்டில் பகன், யங்கூன், மண்டலே, பின்டயா, கியாக்டியோ, நாக்பாலி கடற்கரை ஆகிய இடங்களையும், தாய்லாந்து நாட்டில் பிரா சரோயேன் நீர் வீழ்ச்சி, பா வூ வழிபாட்டு தலம் போன்ற இடங்களை காணும் வாய்ப்பு உள்ளது.
Picture Credit: Reuters

ஆவணங்கள்
சர்வதேச ஓட்டுனர் உரிமம், கார் அல்லது பைக்கின் அசல் பதிவு ஆவணங்கள், வாடகை கார் என்றால், அதற்கான அக்ரிமென்ட் பேப்பர்கள், காப்பீட்டு ஆவணங்கள், சுற்றுலா காப்பீடு, மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டை பற்றிய கையேடுகள் ஆகியவை கைவசம் இருத்தல் அவசியம்.
Picture Credit: Wikimedia Commons

மற்றொரு விஷயம்
ஒரு மாதத்திற்கு முன்னரே உங்கள் பயணத் திட்டம் குறித்து மியான்மர் அரசு அல்லது அரசுத் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதும் நலம் பயக்கும்.
Picture Credit: Wikimedia Commons

பாதுகாப்பு விஷயங்கள்
கையில் போதிய பணம் கையிருப்பு வைத்திருப்பது அவசியம். மேலும், அந்தந்த நாட்டு கரன்சிகளையும் மாற்றி வைத்துக் கொள்ளவும். சிறிய கார்களில் குறைந்தது 4 பேருக்கு மேல் பயணிக்க வேண்டாம். பான்கார்டு மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படங்களையும் கைவசம் இருத்தல் வேண்டும்.
Picture Credit- Via Indiatimes

ஆலோசனைகள்
சொந்த கார் அல்லது பைக்கில் செல்பவர்களுக்கு இது மிக நீண்ட பயணமாக அமையும். அதேநேரத்தில், கவுகாத்தி வரை விமானத்தில் சென்று அங்கிருந்து வாடகை கார் அல்லது பைக் மூலமாக மேற்கண்ட சாலையில் பயணிக்கலாம். சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கான கார் மற்றும் பைக்குகளை அங்குள்ள பல நிறுவனங்கள் வாடகைக்கு விடுகின்றன.


Click it and Unblock the Notifications








