டீசல் வாகனங்கள் தான் பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம்!! அதிரடியான நடவடிக்கையில் டெல்லி அரசு!
ஹரியானா (haryana)-இல் இருந்து டெல்லிக்குள் இனி எந்தவொரு டீசல் பேருந்தும் செல்ல முடியாத அளவிற்கு ஓர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகள் மட்டுமே ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி காணலாம்.
எலக்ட்ரிக் வாகனங்களால் மட்டுமே பசுமையான, மாசற்ற போக்குவரத்தை வழங்க முடியும் என்பதில் நம் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் இந்திய சாலைகளில் ஓடும் மொத்த வாகனங்களில் குறைந்தது 30% ஆவது எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்கிற கொள்கையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இதற்கேற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் எதிர்காலத்தில், எலக்ட்ரிக் வாகனம் இல்லையென்றால், இந்த சாலையில் செல்ல முடியாது என ஒவ்வொரு குறிப்பிட்ட சாலைகளிலும் தடைகள் விதிக்கப்படும். ஆனால், தலைநகர் டெல்லியில் இப்போதே டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டீசல் வாகனங்கள் பயன்படுத்துவதற்கு சவுகரியமானவை மற்றும் பயணத்தின்போது பெரிதாக அதிர்வுகள் இன்றி இயங்கும். அதேபோல், டீசல் வாகனங்களில் மைலேஜையும் அதிகளவில் பெற முடிகிறது. இவ்வளவு நன்மை இருப்பினும், டீசல் வாகனங்களுக்கு எதிராக அரசு போர் கொடி தூக்குவதற்கு காரணம், மற்ற வகை வாகனங்களை காட்டிலும் டீசல் வாகனங்கள் அளவுக்கு அதிகமான கார்பன்களை வெளியிடுவதினால் ஆகும்.

இதனால்தான், பெட்ரோல் வாகனங்களுக்கு முன்னர் முதலில் டீசல் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்கிற முடிவில் மத்திய அரசு உள்ளது. இதன்படி, டெல்லிக்குள் ஹரியானாவில் இருந்து எந்தவொரு டீசல் பேருந்தும் நுழையக் கூடாது என டெல்லி மாநில அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிஎஸ்6-க்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள் என்றால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதேபோல், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகளையும் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு தாராளமாக எடுத்துச் செல்லலாம். ஹரியானா மட்டுமின்றி, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் என்சிஆர் பகுதிகளில் இருந்து செல்லும் பேருந்துகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். அதாவது, முழு ஹரியானா மாநிலத்திற்கும், உத்தர பிரதேசம் & ராஜஸ்தான் மாநிலங்களில் என்சிஆர் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும் மட்டுமே தற்போதைக்கு டீசல் பேருந்துகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 2024 ஜூலை 1ஆம் தேதி முதல், ஹரியானவை போல் மொத்த உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் பிஎஸ்4 டீசல் பேருந்துகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. இந்த ஆணைகளை காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக, தலைநகர் டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பார்க்கப்படுகிறது. டெல்லியில் தூய்மையான காற்றை மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நாட்டில் எந்தவொரு புதிய நடவடிக்கையையும் தலைநகரில் இருந்து துவங்குவதே ஏற்றதாக இருக்கும். ஆதலால், ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு பேருந்தில் செல்பவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications









