நம்பி வாங்கியவர்கள் தலையில் துண்டு... நடந்தது தெரிந்தால் இனி டீசல் கார் வாங்கும் எண்ணம் வரவே வராது
இந்திய மக்கள் மத்தியில், டீசல் கார்களுக்கான வரவேற்பை தவிடுபொடியாக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் டீசல் இன்ஜின் மாடல்கள்தான், புதிய கார் வாங்கும் பலரின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. பெட்ரோல் இன்ஜின் கார்களை விட டீசல் இன்ஜின் கார்கள் அதிக மைலேஜ் வழங்கும் என்பதே இதற்கு முதன்மையான காரணம். அத்துடன் பெட்ரோல் இன்ஜின் கார்களை விட டீசல் இன்ஜின் கார்களுக்கான பராமரிப்பு செலவும் குறைவு.

மேலும் அவற்றின் ஆயுட் காலமும் மிகவும் அதிகமாக இருக்கும். எனவேதான் வாடிக்கையாளர்கள் பலர் டீசல் இன்ஜின் கார்களை விரும்பி வாங்குகின்றனர். இவை அனைத்தையும் விட, இங்கு பெட்ரோல் விலையை காட்டிலும் டீசல் விலை எப்போதும் மிகவும் குறைவாகதான் இருக்கும். ஆனால் இந்தியாவில் இன்று நடைபெற்றுள்ள ஒரு அரிய நிகழ்வு டீசல் கார் வாங்கும் உங்கள் முடிவை மாற்றி விடலாம்.

ஆம், இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலையை டீசலின் விலை ஓவர்டேக் செய்துள்ளது. இதனால் டீசல் கார் வைத்திருப்பவர்களும், டீசல் காரை வாங்கும் முடிவில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் இன்று (ஜூன் 24ம் தேதி) காலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79.76 ரூபாயாக இருந்தது.

பெட்ரோல் விலை இன்று உயரவில்லை. நேற்றைய விலையிலேயே டெல்லியில் இன்றும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டெல்லியில் டீசல் விலை இன்று காலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்தது. இதன் மூலம் ஒரு லிட்டர் டீசலின் விலை 79.88 ரூபாயாக அதிகரித்தது. அதாவது டெல்லியில் பெட்ரோல் விலையை, டீசல் விலை ஓவர்டேக் செய்துள்ளது.

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலையை விட 12 காசுகள் அதிகமான விலையில் டீசல் விற்பனையாகி வருகிறது. 82 நாட்கள் இடைவெளிக்கு பின், இந்தியாவில் தற்போது எரிபொருள் விலை தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. எரிபொருள் விலையை தினமும் திருத்தியமைக்கும் பணிகளை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜூன் 7ம் தேதி மீண்டும் தொடங்கின.

இந்த வகையில் தொடர்ந்து 18வது நாளாக இன்று எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 18 நாட்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 9.41 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 9.58 ரூபாயும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, இல்லத்தரசிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலையை காட்டிலும் டீசல் விலை அதிகமாகியிருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களிலும் ஏறத்தாழ பெட்ரோலுக்கு இணையான விலையிலேயே டீசல் உள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வாட் வரி மாறுபடுவதால், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில், பெட்ரோலுக்கு இணையாக டீசல் விலையும் உயர்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்தியாவின் போக்குவரத்து துறை பெரும்பாலும் டீசலைதான் எரிபொருளாக பயன்படுத்துகிறது. இதன் விளைவாக பஸ் கட்டணங்கள் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதுடன், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டீசல் கார்களுக்கு வரவேற்பு குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








