வரலாற்றில் முதல் முறை.. எரிபொருள் விலையில் நடக்க கூடாதது நடந்தது.. உச்சகட்ட கடுப்பில் இந்திய மக்கள்
வரலாற்றில் முதல் முறையாக, எரிபொருள் விலையில் நடக்க கூடாதது நடந்திருப்பதால், மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னை பெட்ரோல், டீசல் விலை உயர்வு. இங்கு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், அதற்கென தனியாக மாதந்தோறும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு உள்ளது. முன்பு மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலில் இருந்தது.

அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை திருத்தியமைக்கப்படும். ஆனால் தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தது முதலே பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், பைசா கணக்கில் உயர்த்தினால் கூட, வாகன ஓட்டிகளுக்கு அது பெரிதாக தெரிவதில்லை. ஆனால் குறிப்பிட்ட காலம் சென்ற பின் பார்த்தால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கும். அப்படிதான் தற்போது எரிபொருள் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 பைசா உயர்த்தப்பட்டது. அதே சமயம் டீசலின் விலை லிட்டருக்கு 61 பைசா உயர்த்தப்பட்டது. டெல்லியில் தொடர்ந்து 14வது நாளாக இன்றும் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இடையில் சில காலம் பெட்ரோல், டீசல் விலை திருத்தியமைக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 7ம் தேதி முதல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன்படி ஜூன் 20ம் தேதியான இன்று தொடர்ந்து 14வது நாளாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார காலத்தில், தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.62 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 8.28 ரூபாயும் உயர்ந்துள்ளது. வெறும் 14 நாட்களில் இவ்வளவு விலை உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டெல்லியில் நேற்றைய நிலவரப்படி (ஜூன் 19ம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78.37 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று 78.88 ரூபாயாக உயர்ந்து விட்டது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை நேற்று 77.06 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று 77.67 ரூபாயாக உயர்ந்து விட்டது. தலைநகர் டெல்லியை பொறுத்த வரை டீசல் விலையில் இது ஒரு புதிய உச்சமாகும்.

இதற்கு முன்பு டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி 75.69 ரூபாயாக உயர்ந்தது. அதுவே உச்சமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை 77.67 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த ஜூன் 16ம் தேதி ஒரு லிட்டர் டீசல் விலை 75.19 ரூபாயாக இருந்தது. இதன்பின்னர் 60 பைசா விலை உயர்ந்தது.

இதன்மூலம் கடந்த ஜூன் 17ம் தேதி அங்கு ஒரு லிட்டர் டீசல் விலை 75.79 ரூபாயாக உயர்ந்தது. அதாவது ஜூன் 17ம் தேதியே டெல்லியில் டீசல் விலை பழைய வரலாற்றை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டு விட்டது. அதன்பின் தற்போது தினந்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. டீசல் விலை மட்டுமல்லாது, பெட்ரோல் விலையும் டெல்லி வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84 ரூபாயாக உயர்ந்தது. இதுவே அதிகபட்ச பெட்ரோல் விலையாகும். தற்போதைய நிலை நீடித்தால், பெட்ரோல் விலையும் புதிய உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கதிகலங்கி போயுள்ளனர்.

வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, இல்லத்தரசிகளும் இதனால் கவலையடைந்துள்ளனர். ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், கூடவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசலின் இத்தகைய கிடுகிடு விலை உயர்வால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி விடும் சிந்தனையும் பலரின் மனதில் உதித்துள்ளது.

ஆனால் இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் அவ்வளவாக மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டை பொறுத்தவரை ஒரு சில மின்சார டூவீலர்களும், ஒரு சில மின்சார கார்களும் மட்டுமே கிடைக்கின்றன. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றாக்குறை நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








