நல்ல மனுஷன்யா... டீசல் விலையை குறைத்து மாஸ் காட்டிய கெஜ்ரிவால்! எவ்வளவுனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க
முதல்வர் கெஜ்ரிவாலின் அதிரடியால் டெல்லியில் டீசல் விலை வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு பிரச்னையால் பலர் வேலையை இழந்துள்ள நிலையில், நடுத்தர வர்க்க குடும்பங்களை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. குறிப்பாக டீசல் வாகனங்களை வைத்திருப்பவர்களுக்குதான் இந்த விலை உயர்வு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பொதுவாக இந்தியாவில் பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும்போது டீசலின் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் பெட்ரோலின் விலையை விட டீசலின் விலை அதிகமானது. இதனால் டீசல் கார் வைத்திருப்பவர்கள் மற்றும் லாரி, பேருந்துகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

டீசலின் விலை உயர்ந்தால், கூடவே அத்தியாவசியமான பொருட்களின் விலையும் அதிகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் டீசலுக்கு அதிகமான தொகையை செலவிட வேண்டியது வரும் என்பதால், அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையில் எதிரொலிக்கும்.

இதனால் இல்லத்தரசிகளும் கவலையடைந்திருந்தனர். ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூலை 30ம் தேதி), அம்மாநில வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 8 ரூபாய்க்கும் மேல் குறையவுள்ளது. டீசல் மீதான வாட் வரியை டெல்லி அரசு குறைத்துள்ளதால், இந்த பலன் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்க போகிறது.

டீசலின் மீதான வாட் வரியை (Value Added Tax - VAT) டெல்லி அரசு தற்போது கிட்டத்தட்ட பாதியாக குறைத்துள்ளது. டெல்லியில் டீசல் மீது 30 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை வெறும் 16.75 சதவீதமாக டெல்லி அரசு தற்போது குறைத்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 8.36 ரூபாய் குறையும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வாட் வரி குறைப்பு எதிரொலியால் டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 82 ரூபாயில் இருந்து 73.64 ரூபாயாக குறையவுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் தொழில்துறையினரின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

டெல்லியை பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பெட்ரோல், டீசலுக்கு என பெரிய தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம் நடுத்தர வர்க்க மக்களுக்கு இருக்கிறது.

ஏற்கனவே வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு போன்ற பிரச்னைகளால் தவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைந்தால், நிலைமையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்பது வாகன ஓட்டிகளின் எண்ணம். வாகன ஓட்டிகளின் இந்த கோரிக்கையை மாநில அரசுகள் நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடுத்தர வர்க்க மக்களை போல் தற்போது மாநில அரசுகளும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையால் அரசுகளின் வருவாய் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மது விற்பனை ஆகியவைதான் தற்போது அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கின்றன. எனவே டெல்லி பாணியில் மற்ற மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரியை குறைப்பது சந்தேகம்தான்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








