உச்சகட்ட பதற்றம்! பெட்ரோல், டீசல் வண்டிகளுக்கு முற்றிலுமாக தடை? என்ன நடக்க போகுதோனு அதிர்ச்சியில் ஓனர்கள்...
இந்தியாவின் பெரு நகரங்கள் தற்போது சந்தித்து கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்னை எதுவென்று கேட்டால், காற்று மாசுபாடு (Air Pollution) என தயங்காமல் சொல்ல முடியும். குறிப்பாக டெல்லியில் (Delhi) காற்று மாசுபாடு பிரச்னை தலை விரித்தாடி கொண்டுள்ளது. எனவே அங்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேசிய தலைநகர் டெல்லியில் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT - National Green Tribunal) உத்தரவு அமலில் உள்ளது.
இதன்படி அங்கு 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களை இயக்க முடியாது. இது போதாதென்று, காற்றின் தரம் மோசமடையும் சமயங்களில் எல்லாம் அங்கு கூடுதலாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு விடும்.

இதே பாணியில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையிலும் (Mumbai) டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாம்பே உயர் நீதிமன்றம் (Bombay High Court) தற்போது வழங்கியுள்ள ஒரு சில ஆலோசனைகளால்தான், வாகன உரிமையாளர்கள் மத்தியில் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் காற்றின் தரம் மோசமடைந்து கொண்டே வருவது தொடர்பான பொது நல வழக்கு ஒன்றை பாம்பே உயர் நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணையின்போதுதான், மும்பையில் டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான ஆலோசனைகளை பாம்பே உயர் நீதிமன்றம் வழங்கியது.

இதன்படி டீசல் வாகனங்களில் இருந்து சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டியதின் முக்கியத்துவத்தை தலைமை நீதிபதி டிகே உபத்யாய் மற்றும் நீதிபதி ஜிஎஸ் குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு வலியுறுத்தியது. அதற்காக டெல்லியில் உள்ள விதிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என நாங்கள் கூறவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர். இது பாம்பே உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை மட்டுமே. இருப்பினும் அரசு அதிகாரிகள் இதை பின்பற்றி கடுமையான விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து விடுவார்களோ? என்ற அச்சம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே கூறியபடி இது பாம்பே உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை மட்டுமே. கட்டுப்பாடுகள் குறித்த கடுமையான உத்தரவுகள் எதையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. எனவே வாகன உரிமையாளர்கள் தற்போதைக்கு அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
ஏனெனில் எதிர்காலத்தில் நிச்சயமாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றுதான் நாங்கள் கருதுகிறோம். அத்துடன் மத்திய அரசும் கூட, டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலையில்தான் உள்ளது. டீசல் வாகனங்களின் உற்பத்தியில் இருந்து விலக வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து முற்றிலுமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வெளியேற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கடந்த காலங்களில் கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு மற்றும் தடை என தொடர்ந்து வெளியாகி வரும் இது போன்ற செய்திகளால், வாகன உரிமையாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தற்போதைக்கு உடனடியாக பிரச்னைகள் எதுவும் இல்லை. இருப்பினும் எதிர்காலத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் நிச்சயமாக வரும். இதன் காரணமாகவே நிறைய பேர் தற்போது படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








