க்யூல வெயிட் பண்ணாம விஐபி போல போலாம்... இப்பவே டிஜியாத்ரா செயலிய டவுண்லோடு பண்ணிட வேண்டியதுதான்!
டிஜியாத்ரா செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலின் சிறப்பு மற்றும் எப்படி பன்படுத்துவது என்பது பற்றிய விபரங்களையும், இந்த செயலியை வைத்திருந்தால் என்ன மாதிரியான பலன்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இப்போ எல்லாம் விமான நிலையங்கள்கூட ரயில் நிலையங்களைப் போல கூட்ட நெரிசல் மிகுந்ததாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற சர்வதேச விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த கூட்ட நெரிசலைச் சமாளிக்கவே விமானத்தை பிடிக்க இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையம் செல்ல வேண்டியதாக இருக்கின்றது. இத்தகைய அவலத்தையும், விமான நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலையும் குறைக்கும் விதமாக இந்திய விமானத்துறை அமைச்சகம் ஓர் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

'டிஜி யாத்ரா' (DigiYatra) எனும் செயலியையே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது விமான நிலையத்தில் ஏற்படும் கூட்டலை நெரிசலைத் தவிர்க்கும் விதமாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தடையில்லா விமான பயணத்தை பயணிகள் மேற்கொள்ளவும் இந்த செயலி உதவியாக இருக்கும். குறிப்பாக, பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நீண்ட நேரமாக காத்திருப்பதையும் இந்த செயலி தவிர்க்க உதவும். இப்படியான மிக சிறந்த செயலியாகவே டிஜி யாத்ரா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்-குறித்த மேலும் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பிதவிற்குள் போகலாம்.
டிஜி யாத்ரா என்றால் என்ன?
விமான பயணங்களின்போது தடையற்ற பயண அனுபவத்தை அனுபவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் செயலியே டிஜி யாத்ரா. இதனை முகத்தை அடையாளம் காணும் விதமாக உருவாக்கியிருக்கின்றனர். இதற்காக எஃப்ஆர்டி எனும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் (facial recognition technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி வாயிலாக தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டால் தனியாக அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டியம் அவசியம் இருக்காது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்த செயலி பயணிகள் தங்கள் முகத்தையே போர்டிங் பாஸாக பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றது. இவ்வாறு முன்கூட்டியே நாம் செய்துவிடுவதனால் பாதுகாப்பு சோதனைக்கான வரிசையில் நீண்ட காத்திருக்க வேண்டிய சூழலை நம்மால் தவிர்க்க முடியும்.
டிஜி யாத்ராவை எப்படி பயன்படுத்துவது?
ஐ-போன் மற்றும் ஸ்மார்ட்போன் இரு விதமான செல்போன்களை பயன்படுத்துபவர்களாலும் இந்த செயலியை டவுண்லோடு செய்துக் கொள்ள முடியும். இந்த செயலியைப் பயன்படுத்த வேண்டுமானால் உங்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். இதன் வாயிலாகவே டிஜி லாக்கர் செயலில் நம்முடைய கணக்கை பதிவு செய்ய முடியும். ஆதார் எண்ணை உள்ளிட்ட பின்னர் செல்ஃபி எடுத்து அந்த ஃபோட்டோவையும் அப்ளோடு செய்ய வேண்டும். இதுதவிர, பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் மற்றும் அடையாள விபரங்கள் ஆகியவற்றையும் இதில் உள்ளிட வேண்டும். அடையாள விபரமாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த தரவுகள் அனைத்தையும் உள்ளிட்ட பின்னரே நமக்கான டிஜி யாத்ரா செயலி தயாராகும். இவ்வாறு செய்வதன் வாயிலாக விமான நிலையத்திற்குள் மிக எளிதாக நுழைய முடியும். முகத்தை ஸ்கேன் செய்வதன் வாயிலாக விமானங்கள் நிலையங்கள் நம்முடைய அனைத்து தகவல்களையும் தானாக எடுத்துக் கொள்ளும்.
டிஜி யாத்ரா விமான நிலையத்தில் எப்படி வேலை செய்கிறது?
டிக்கெட் முன்பதிவு செய்வது தொடங்கி விமானத்தில் ஏறும் வரை டிஜி யாத்ரா செயலி உங்களுடன் தொடர்ந்து பயணிக்கும். விமான டிக்கெட் புக் செய்யும்போது உங்களுக்காக வழங்கப்பட்ட தனி நபர் டிஜி யாத்ரா ஐடியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக உங்களுடைய பயண விபரம் தானாகவே விமான நிலையங்களுக்கு டிஜி யாத்ரா செயலி வாயிலாக பகிரப்படும். முதல் முறையாக இந்த ஆப்பினை பயன்படுத்துவோர் கியோஸ்க் பதிவை ஏர்போர்ட்டில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே உங்கள் டிஜி யாத்ரா ஐடி முழுமையாக அங்கீகரிக்கப்படும். ஆதார் அட்டை இல்லாமல் இந்த ஆப்பில் ஐடியை உருவாக்கியிருந்தால் சிஐஎஸ்ஜி அதிகாரி வாயிலாக உங்கள் அக்கவுண்டை அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிஜி யாத்ரா சேவை எங்கெல்லாம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது?
தற்போது டிஜி யாத்ரா சேவை இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களின் விமான நிலையத்திற்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு மற்றும் வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2023 மார்ச் முதல் ஹைதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் விஜயவாடா ஆகிய விமான நிலையங்களிலும் டிஜி யாத்ரா சேவையைப் பன்பாட்டிற்குக் கொண்டு விமானத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, படி படியாக நாடு முழுவதும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிஜி யாத்ரா பாதுகாப்பானதா?
தனி மனிதனின் தரவுகளுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகின்றது. ஏற்கனவே, ஆதார் கார்டுக்காக கொடுக்கப்பட்ட விபரங்கள் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டதாக குற்றாச் சாட்டுகள் உள்ளன. இந்த மாதிரியான சூழலில் டிஜி யாத்ராவிற்கு வழங்கப்படும் தரவுகள் விற்க அல்லது திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால், தற்போது இந்திய அரசு தெரிவித்திருப்பதன்படி, டிஜி யாத்ரா முழுமையாக பாதுகாக்கப்பட்ட செயலி என அறிவுறுத்தப்படுகின்றது. பயணிகளின் பயோமெட்ரிக் விபரங்கள் அந்தந்த நபர்களின் ஸ்மார்ட்போனிலேயே சேமிக்கப்படும். ஆகையால், வேறு எந்த நபருக்கும் இந்த தரவுகள் விற்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
டிஜி யாத்ராவின் நன்மைகள் என்ன?
டிஜி யாத்ராவின் வாயிலாக பல்வேறு நன்மைகள் உள்ளன. முதலாவதாக பல கட்ட சோதனைக்காக நாம் காத்திருப்பதை தவிர்க்க முடியும். சில நேரங்களில் விமானத்தை பிடிக்க நாம் விரைந்து செல்ல வேண்டியிருக்கும். அந்தமாதிரியான நேரத்தில் ஐடி கார்டுகளை தவிர்த்து செல்ல நேரிடலாம். இந்த மாதிரியான சூழலைத் தவிர்க்க டிஜி யாத்ரா மிகுந்த உதவியாக இருக்கும். இதுமட்டுமில்லைங்க நாம் பயணிக்கும் விமானம், விமான நிலையத்தின் நிலை குறித்த அனைத்து தகவல்களையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications