டிசி அவந்தி கார் விற்பனையில் பெரும் மோசடி... திலீப் சாப்ரியா அதிரடி கைது குறித்த பரபரப்புத் தகவல்கள்!
டிசி டிசைன் நிறுவனத்தின் ஸ்தாபகர் திலீப் சாப்ரியா கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் பெரும் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. கார்கள் மட்டுமின்றி, சினிமா நட்சத்திரங்களின் கேரவன்களை வடிவமைத்துக் கொடுப்பதிலும் கை தேர்ந்த நிறுவனமாக பெயர் பெற்றிருக்கிறது.
டிசி டிசைன் நிறுவனத்தின் அதிபர் திலீப் சாப்ரியா பிரபல கார் வடிவமைப்பு நிபுணர். ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் பணியாற்றியவர்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் திலீப் சாப்ரியா மும்பை குற்றப் புலனாய்வு போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார். இந்த தகவல் கார் விற்பனைத் துறை, சினிமாத் துறையினர் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இவரது வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், திலீப் சாப்ரியா கைது குறித்து மும்பை குற்றப் புலனாய்வு போலீசார் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் திலீப் சாப்ரியா டிசி அவந்தி என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை அறிமுகம் செய்தார்.

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பதுடன், மிகவும் விலை குறைவான கார் மாடல் என்பதால், பணக்காரர்கள் இந்த காரை முன்பதிவு செய்து வாங்கினர். இந்த டிசி அவந்தி கார் விற்பனையில்தான் அவர் பெரும் மோசடி செய்து வந்தது அம்பலமாகி இருக்கிறது.

அதாவது, டிசி அவந்தி கார்களை விற்பனை செய்வதற்கு முன்பே வாடிக்கையாளர்களின் பெயரில் அவர் மோசடியாக கடன் வாங்கி இருக்கிறார். பின்னர் அந்த டிசி அவந்தி கார்கள் வேறு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், பல கார்களின் கடன்கள் வாராக் கடன் பட்டியலில் உள்ளன.

மேலும், ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவற்றை கட்டுவதை தவிர்ப்பதற்காக ஒரே சேஸீ எண் மற்றும் எஞ்சின் எண்களுடன் பல அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளார். போலி பதிவு எண்ணுடன் டிசி அவந்தி கார் ஒன்று மும்பையில் இருப்பதாக வந்த புகாரின் பேரில்தான் மும்பை குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

அப்போதுதான் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று ஒரு டிசி அவந்தி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் சென்னையில் உள்ள ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் சரியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

அதேநேரத்தில், அதே சேஸீ எண் மற்றும் எஞ்சின் கொண்ட மற்றொரு டிசி அவந்தி கார் ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மேல் விசாரணைக்காக அந்த காரை போலீசார் தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த பெரும் மோசடிக்கு திலீப் சாப்ரியாதான் மூளையாக செயல்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் ரூ.40 கோடி வரை திலீப் சாப்ரியா மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.100 கோடி வரை மோசடி நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

மொத்தம் 90 டிசி அவந்தி கார்கள் இந்த மோசடியில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், டிசி அவந்தி கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இதுதொடர்பாக, திலீப் சாப்ரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் டிசி அவந்தி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 120 டிசி அவந்தி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான கார்கள் திலீப் சாப்ரியா மோசடியில் சிக்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், டிசி அவந்தி காரை வாங்குவதற்காக ரூ.5 லட்சத்தை கொடுத்து புக்கிங் செய்துள்ளார். ஆனால், அவருக்கு உரிய நேரத்தில் காரை கொடுக்காமல் இழுத்தடித்ததால், 2015ம் ஆண்டு டிசி நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது நினைவிருக்கலாம்.
Via- TOI


Click it and Unblock the Notifications








