அப்போ 500 ஊழியர்களுக்கு கார் பரிசு... இப்போ முஸ்லீம் இளைஞருக்கு வேலை மறுப்பு!
நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு கார்களையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் பரிசாக வழங்கி பரபரப்பை கிளப்பிய அதே நிறுவனம்தான், இப்போது முஸ்லீம் இளைஞருக்கு வேலை மறுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, குஜராத்தை சேர்ந்த ஹரே கிருஷ்ணா என்ற வைர ஏற்றுமதி நிறுவனம், சிறப்பாக பணியாற்றிய தனது ஊழியர்கள் 491 பேருக்கு ஃபியட் புன்ட்டோ கார்களையும், 207 பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஆபரணங்களையும் பரிசாக வழங்கியது. இதற்காக, பிரம்மாண்ட விழா ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்த செய்தி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இப்போது இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பலர், அந்த நிறுவனத்தின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர்.
அதாவது, மும்பையில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் பணிபுரிவதற்காக ஜெஷான் அலிகான் என்ற எம்பிஏ., பட்டதாரி விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அந்த நிறுவனம் அனுப்பிய பதிலில், "மன்னிக்கவும்... முஸ்லீம் அல்லாதோருக்கு மட்டுமே, எங்களது நிறுவனத்தில் இடம் அளிக்கப்படும்," என்று சர்ச்சைக்குரிய பதிலை அனுப்பியிருந்தது.
இந்த பதில் ஜெஷான் அலிகானை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வள்ளல் மனம் படைத்த நிறுவனமாக வாழ்த்தப்பட்ட நிலையில், இப்போது தனது மதவெறி முகத்தை காட்டி வசவுகளை வாங்கிக் கட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








