ஐபிஎஸ் அதிகாரி கார் மீது வேணும்னே காரை மோதியது இவரா! ஸ்டேஷனுக்கு வர வெச்சு சம்பவம் பண்ணீட்டாங்க!
ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவுதான் பிரபலமானவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் கிடையாது. அதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. ஆம், தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகை டிம்பிள் ஹயாத்தி (Dimple Hayathi) மீது வழக்கு பாய்ந்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் காரின் மீது டிம்பிள் ஹயாத்தியின் கார் மோதியுள்ளது. ராகுல் ஹெக்டே (Rahul Hegde) என்ற ஐபிஎஸ் அதிகாரியின் வெள்ளை நிற டொயோட்டா பார்ச்சூனர் (Toyota Fortuner) காரின் மீதுதான், டிம்பிள் ஹயாத்தியின் கார் பின்னால் இருந்து மோதியிருக்கிறது.

ராகுல் ஹெக்டேவும், டிம்பிள் ஹயாத்தியும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில்தான் வசித்து வருகின்றனர். அங்கு ராகுல் ஹெக்டேவின் கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த சமயத்தில், டிம்பிள் ஹயாத்தியின் கார் மோதியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, டிம்பிள் ஹயாத்தியும், அவரது நண்பர் டேவிட் என்பவரும் காருக்குள் இருந்துள்ளனர்.
டிம்பிள் ஹயாத்தி காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ராகுல் ஹெக்டேவின் கார் டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் காவல் துறையினர், டிம்பிள் ஹயாத்தி மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டிம்பிள் ஹயாத்தி வேண்டுமென்றே தனது காரை, ராகுல் ஹெக்டேவின் கார் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னைகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே டிம்பிள் ஹயாத்தி கடந்த காலங்களிலும் கூட இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த முறை நடைபெற்ற சம்பவத்தின்போது, டிம்பிள் ஹயாத்தி மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாக, ராகுல் ஹெக்டேவின் கார் டிரைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு வந்து விட்டு, ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் இருந்து டிம்பிள் ஹயாத்தி வெளியே வரும் வீடியோவும் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் (Viral Video), டிம்பிள் ஹயாத்தியின் நண்பர் டேவிட் உடன் இருக்கிறார். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) காரில் ஏறி அவர்கள் புறப்பட்டு செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே கூறியது பின்வருமாறு:
''கடந்த காலங்களில், எனது காருக்கு வழி விடாமல், எனக்கு அவர்கள் தொந்தரவு கொடுத்துள்ளனர். எனது வேலை பொறுப்புகள் காரணமாக, நான் உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவேன்'' இவ்வாறு ராகுல் ஹெக்டே கூறியுள்ளார். இதற்கிடையே நடிகை டிம்பிள் ஹயாத்தி இதற்கு பதில் அளிக்கும் வகையில், ''அதிகார துஷ்பிரயோகம் தவறுகளை மறைக்காது. சத்யமேவஜெயதே'' என ட்வீட் செய்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிடைத்துள்ள தகவல்களை எல்லாம் வைத்து பார்க்கையில், டிம்பிள் ஹயாத்தி மற்றும் ராகுல் ஹெக்டே ஆகிய இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னைகள் இருந்து வருவது தெரிகிறது. எனவே காவல் துறை உயர் அதிகாரிகள், மனசாட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதே எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








