1000 கோடி ரூபாய் படம் எடுத்த டைரக்டர் மாதிரியா இருக்காரு? எளிய வாழ்க்கையில் சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிடுவாரு!!
நாக் அஷ்வின் (Nag Ashwin), இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா? நடிகர் பிரபாஸை வைத்து கல்கி திரைப்படத்தை இயக்கி தெலுங்கு சினிமாவை அதிரவிட்ட திரைப்பட இயக்குனரின் பெயரும் இதுதான். மிக பிரம்மாண்டமான திரைப்படத்தை எடுத்துக் கொடுத்தாலும், திரைப்பட இயக்குனர் நாக் அஷ்வின் எளிமையான வாழ்க்கையை விரும்பக்கூடியவர். எந்த அளவிற்கு என்றால், பல நூறு கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டிய திரைப்படத்தை இயக்கிவிட்டு சிம்பிளாக, அளவில் சிறியதான மஹிந்திரா காரில் சென்றுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவை இனி பார்க்கலாம்.
மகாபாரத இதிகாச கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கல்கி 2898 AD திரைப்படம் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸின் கேரியரில் முக்கியமான திரைப்படம் என்றுதான் சொல்ல வேண்டும். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், தமிழ் நடிகர் கமலாஹாசன், தீபிகா படுகோனே, துல்கர் சல்மான் என பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது.

இந்த 2024ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி கோடை விடுமுறையை டார்க்கெட் செய்து திரைக்கு வந்த கல்கி 2898 AD திரைப்படத்தை இயக்கியவரான நாக் அஷ்வின், பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் காமுலாவின் சிஷ்யன் ஆவார். குருவை போலவே சிஷ்யனும் சிம்பிளான வாழ்க்கையை விரும்பக்கூடியவர். பல நிகழ்ச்சிகளுக்கு ஆடம்பரம் இல்லாத உடைகளை நாக் அஷ்வின் அணிந்து வந்துள்ளதை பார்த்திருக்கிறோம்.
அவரது சிம்பிளிசிட்டியின் மற்றொரு வெளிப்பாடாக இணையத்தில் ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. சொல்லப்போனால், அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர் நாக் அஷ்வின் தான். போட்டோவில், இயக்குனர் நாக் அஷ்வின் விலை குறைவான மற்றும் அளவில் சிறியதான மஹிந்திரா இ2ஒ பிளஸ் (Mahindra e2o plus) என்கிற எலக்ட்ரிக் காரை ஓட்டியப்படி செல்கிறார். மேலும், அவரை சுற்றிலும் இலை, தழைகளாக உள்ளன.

இதுகுறித்த நாக் அஷ்வினின் இன்ஸ்டாகிராம் பதிவில், "மகாநதி, ஜதிரத்னலு மற்றும் கல்கி 2898AD-க்கு எனது வாகனம். எனது வீட்டில் உள்ள சோலார் பேனல்களால் சார்ஜ் செய்யப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டா பதிவின்படி பார்க்கும்போது, மகாநதி திரைப்படத்தில் இருந்து நாக் அஷ்வினின் லேட்டஸ்ட் திரைப்படமான கல்கி 2898AD வரையில் அவரது தினசரி காராக இந்த மஹிந்திரா இ2ஒ பிளஸ் எலக்ட்ரிக் கார் இருந்து வருகிறது.
வீட்டில் எளிதாக சார்ஜ் செய்துக் கொண்டு, எந்தவொரு பெட்ரோல்/ டீசல் செலவும் இன்றி ஜாலியாக இந்த காரை நாக் அஷ்வின் பயன்படுத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நாக் அஷ்வினின் மஹிந்திரா இ2ஒ பிளஸ் எலக்ட்ரிக் கார் அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. தனது அனைத்து போக்குவரத்துக்கும் இந்த காரை தான் நாக் அஷ்வின் பயன்படுத்தி வருவது அவரது சமீபத்திய இன்ஸ்டா பதிவின் மூலம் தெரிகிறது.
காருக்குள் பயணிகள் அமரும் பின் இருக்கை வரிசையில் இலை, செடிகளை வைத்துக் கொண்டு நாக் அஷ்வின் காரை ஓட்டியப்படி சென்றுள்ளார். இவரது சிம்பிளிசிட்டியை நாம் பாராட்டினாலும், இவ்வாறு இடையூறுகள் உடன் காரை ஓட்டுவது ஆபத்தானது ஆகும். காற்றில் இலைகள் டிரைவரின் பார்வையை மறைத்தாலோ அல்லது டிரைவரின் கண்களில் பட்டாலோ அவர் காரின் கண்ட்ரோலை இழப்பதற்கு வாய்ப்புள்ளது.
மஹிந்திரா இ2ஒ பிளஸ் எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எலக்ட்ரிக் கார்கள் என்றாலே உடனடியாக டாடா எலக்ட்ரிக் கார்கள் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால், டாடாவுக்கு முன்னதாகவே மஹிந்திரா எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் இறங்கிவிட்டது. மஹிந்திராவின் 2வது எலக்ட்ரிக் காராக 2013ஆம் ஆண்டில் இ2ஒ பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், மஹிந்திரா இ2ஒ பிளஸ் எலக்ட்ரிக் காரின் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா பிரபலங்கள் என்றாலே மாதத்திற்கு ஒரு புதிய சொகுசு காரை வாங்குவார்கள் என சொல்லும் அளவிற்கு அவ்வப்போது அதுகுறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். ஆனால், அவர்களுடன் ஒப்பிடுகையில் நாக் அஷ்வின் முற்றிலும் வித்தியாசமானவராக விளங்குகிறார். இவரது கல்கி 2898AD திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட புஜ்ஜி வாகனத்திற்காக பல லட்ச ரூபாய்கள் செலவழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவ்வாறான ஒரு வாகனம் உருவாக காரணமாக இருந்தவர் இவ்வளவு சிறிய எலக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருவது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








