சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி! கட்டணம் எவ்வளவு தெரியுமா?
திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து அறிமுகம் செய்துள்ள ஸ்கூட்டர்-டாக்ஸி சேவை பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால், ஓலா, உபேர் போன்ற கால்-டாக்ஸிகள் மற்றும் வழக்கமான ஆட்டோக்களை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர ஸ்கூட்டர்-டாக்ஸி மற்றும் பைக்-டாக்ஸி சேவைகளும் சமீப காலமாக பயணிகள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

இந்த வரிசையில் மா-உலா (Maa-Ulaa) என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர்-டாக்ஸி சேவை திருச்சி மாநகரில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மா-உலா என்பது மாற்றுத்திறனாளிகள் உலா என்பதை குறிக்கிறது. ஆம், மாற்றுத்திறனாளிகள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துதான் இந்த புதிய ஸ்கூட்டர்-டாக்ஸி சேவையை தொடங்கியுள்ளனர்.

மா-உலா ஸ்கூட்டர் டாக்ஸி சேவை திருச்சி மாநகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இந்த சேவையை வழங்கி வந்தனர். இந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் 20ஆக உயர்ந்துள்ளது. இதில், இரண்டு பெண்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

மா-உலா குழுவினர் நியாயமான கட்டணத்தில், பயணிகளை பிக் அப் மற்றும் டிராப் செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்டு உள்பட 5 முக்கியமான இடங்களில், மா-உலா குழுவினர் பிக்-அப் சேவையை வழங்கி வருகின்றனர். அங்கிருந்து உங்களால் குறிப்பிட்ட இடங்களுக்கு இந்த ஸ்கூட்டர்-டாக்ஸியில் பயணிக்க முடியும்.

விரைவில் மாநகர் முழுமைக்கும் தங்கள் சேவையை விரிவுபடுத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இது தவிர 99404-09926 என்ற பிரத்யேக ஹெல்ப்லைன் எண் மூலமாகவும் நீங்கள் ரைடை புக் செய்ய முடியும். நீங்கள் இந்த எண்ணிற்கு அழைத்தால், உங்களுக்கு அருகில் உள்ள மா-உலா உறுப்பினர் உடனடியாக உங்களை பிக்-அப் செய்து கொள்வார்.

அத்துடன் மா-உலா என்ற ஆப் மூலமாகவும் நீங்கள் ரைடு புக் செய்யலாம். மா-உலா குழு பகல் நேரங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. அதுவே இரவு நேரம் என்றால், (இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் கட்டணம். இந்த கட்டணம் நியாயமானதாக இருப்பதாகவும், பயணம் இனிமையாக அமைவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

கேப் அல்லது ஆட்டோவை புக் செய்ய பயணிகள் அதிக பணத்தை செலவிடுகின்றனர். ஆனால் பயணிகளின் பணத்தை சேமிக்க உதவுவது, லாபத்தை காட்டிலும் மன நிறைவை தருவதாகவும் மா-உலா குழுவினர் தெரிவிக்கின்றனர். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்காததால்தான், ஸ்கூட்டர்-டாக்ஸி சேவையை தொடங்கியதாக மா-உலா குழு கூறுகிறது.

வாழ்க்கை நடத்துவதற்கு குடும்பத்தினரை சார்ந்து இருக்காமல், மா-உலா குழுவினர் தன்னம்பிக்கையுடன் போராடுவதாலும், பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். மா-உலா குழு பிரத்யேகமான மூன்று சக்கர ஸ்கூட்டரில், சேவை வழங்கி வருகிறது. இவர்கள் ஹெல்மெட் அணியவும் தவறுவதில்லை. அத்துடன் பணியின்போது பிரத்யேகமான மஞ்சள் நிற டீ-சர்ட்டை அணிந்திருக்கின்றனர்.

ஆனால் ஆட்டோ டிரைவர்கள் சிலர் மா-உலா குழுவினரை தங்கள் தொழிலுக்கு எதிரியாக பார்க்கின்றனர். ஒரு சில ஆட்டோ டிரைவர்களிடம் இருந்து மா-உலா குழுவினர் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு கேட்டு மாவட்ட நிர்வாகத்தை அணுக மா-உலா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் நடத்தும் பைக்-டாக்ஸி சேவைக்கு நிர்வாக ரீதியிலான ஆதரவு வழங்கப்படும்'' என்றார். குறையை பெரிதாக பொருட்படுத்தாமல், விடாமுயற்சியுடன் முன்னேற துடிக்கும் மா-உலா குழு தமிழகம் முழுவதும் தங்களது சேவைவை விரிவுபடுத்த வாழ்த்துக்கள்!
Image Courtesy: http://maaulaa.org/


Click it and Unblock the Notifications








