ரேட் கம்மியா இருந்தாலும் ரயில்வே தண்டவாளத்திற்கு பக்கத்துல இடம், வீடு வாங்க கூடாது... இவ்ளோ பிரச்னைகள் வருமா?
ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் வீடு இருந்தால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆஸ்துமா அபாயம்
இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 13,555 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 37 சதவீத ரயில்கள் டீசல் இன்ஜின்கள் மூலமாக இயங்குகின்றன. எஞ்சிய 63 சதவீத ரயில்கள் மட்டுமே எலெக்ட்ரிக் இன்ஜின்கள் மூலமாக இயக்கப்படுகின்றன. இன்னமும் டீசல் இன்ஜின்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், காற்று மாசுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

அதிக அளவிலான காற்று மாசுபாடு, ஆஸ்துமா தாக்குதலை 40 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்களுக்கு நோய் மேலும் தீவிரம் அடையலாம்.

அதிர்வுகள்
ரயில்கள் சிறிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை. இந்த அதிர்வுகள் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள வீடுகளையும் சென்றடையும். இந்த அதிர்வுகள் வீடுகளில் சேதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் ஏற்கனவே உள்ள பிரச்னைகளை இந்த அதிர்வுகள் அதிகப்படுத்தலாம்.

அதாவது ஏற்கனவே விரிசல் போன்ற பிரச்னைகள் இருந்தால், அவற்றை இந்த அதிர்வுகள் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே வீடு பழையதாக இருந்தாலோ அல்லது விரிசல் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, பராமரிப்பு செலவிற்காக அதிக தொகையை நீங்கள் செலவிட வேண்டிய சூழல் உருவாகும்.

இதய நோய்கள்
ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே உள்ள வீட்டில் வசிப்பதில் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்னையாக சத்தத்தை குறிப்பிடலாம். ரயில் மெதுவாக செல்லும்போது வேண்டுமென்றால் சத்தம் குறைவாக வரலாம். ஆனால் ரயில் வேகம் எடுத்து விட்டால், பயங்கர சத்தத்தை நீங்கள் கேட்க வேண்டியதிருக்கும். இதுதவிர ரயிலின் லோகோ பைலட் (ரயில் டிரைவர்) ஹாரனை வேறு அடிப்பார்.

ரயில்களின் ஹாரன் சத்தமும் பயங்கரமானதாக இருக்கும். ஏதாவது ஒரு காரணத்திற்காக ரயில் நிறுத்தப்படுகிறது என்றாலும் கூட நீங்கள் பயங்கர சத்தத்தை கேட்க வேண்டியதிருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சத்தங்கள் உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தினரின் தூக்கத்தை கெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக ரயிலில் இருந்து வரும் பயங்கர சத்தம், இதய நோய்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த பயங்கர சத்தமானது, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்
ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். ரயில்வே தண்டவாளங்களை ஒட்டி பல்வேறு பகுதிகளில், கேட்கள் அமைக்கப்பட்டிருக்கும். ரயில் கடந்து செல்லும்போது அவை மூடப்பட்டு விடும். அப்படி ரயில்வே கேட்கள் மூடப்படும் சமயத்தில் 2 பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும்போதோ, குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போதோ, மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும்போதோ போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் வசிப்பதில் இருக்கும் மிக முக்கியமான பிரச்னைகளில் இதுவும் ஒன்றாகும்.

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் இருப்பதன் காரணமாகவே, ரயில்வே தண்டவாளங்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ள வீடுகள் மற்றும் இடங்கள் சற்று குறைவான விலையில் கிடைக்கின்றன. குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக நீங்கள் அவற்றை வாங்கினால், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

எனவே ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் வீடு அல்லது இடம் வாங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்து கொள்ளுங்கள். அத்துடன் தற்போது உங்களுக்கு குறைவான விலையில் கிடைப்பது சாதகமான விஷயம் என்றாலும் கூட, நீங்கள் அதனை விற்பனை வேண்டிய சூழல் ஏற்பட்டால், குறைவான விலைக்கே விற்பனை செய்ய முடியும் என்பது பாதகமான விஷயம் என்பதையும் மறந்து விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications