கடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா?
குழந்தைகளுக்கான தலை கவசங்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யும் நடவடிக்கையை, போக்குவரத்து துறை அதிகாரிகளும், போக்குவரத்து காவல் துறையினரும் தற்போது எடுத்து வருகின்றனர். எனவே அங்கு தலை கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான தலை கவசங்களுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேருக்கும் தலை கவசம் அவசியம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் தலை கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம், 2019ன்படி தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர அவர்களின் ஓட்டுனர் உரிமம் 3 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படும். ஆனால் இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அபராத தொகையை அரசு 500 ரூபாயாக குறைத்தது.

அதே சமயம் ஓட்டுனர் உரிமத்தை இடை நீக்கம் செய்யும் நடவடிக்கை அமலுக்கே கொண்டு வரப்படவில்லை. ஆனால் தலை கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை இடை நீக்கம் செய்யும் நடவடிக்கையை தீவிரமாக அமல்படுத்துவது என போக்குவரத்து துறை சமீபத்தில் அதிரடியாக முடிவெடுத்தது.

இதன்படி இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் தலை கவசம் அணிவது கட்டாயம் என கர்நாடக மாநில போக்குவரத்து துறை சமீபத்தில் உத்தரவிட்டது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் இதில் அடக்கம். இந்த எச்சரிக்கை மீறப்பட்டால், இரு சக்கர வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமம் 3 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படும்.

இந்த உத்தரவை அதிகாரிகள் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளதால், தலை கவச விற்பனை அதிகரித்துள்ளது. பெரியவர்கள் பெரும்பாலும் தலை கவசம் வைத்திருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு பலரிடம் தலை கவசம் இல்லை. எனவே பெங்களூரில் லால்பாக் சாலை மற்றும் ஜேசி சாலைகளில் உள்ள கடைகளில் குழந்தைகளுக்கான தலை கவசங்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.

ஆனால் குழந்தைகளுக்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையிலான விலைகளில் ஒரு சில வகையான தலை கவசங்கள் மட்டுமே இருப்பதாக தலை கவச விற்பனை கடைகளை நடத்தி வரும் சிலர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''பொதுவாக குழந்தைகளுக்கான தலை கவசங்களுக்கு எப்போதும் பெரிய அளவில் தேவை இருக்காது. எனவே ஒரு சில வகைகள் மட்டுமே தற்போது இருக்கின்றன.

ஆனால் தற்போது குழந்தைகளுக்கான சிறிய தலை கவசங்களை கேட்டு நிறைய பேர் வருகின்றனர். எனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த வியாபாரம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது'' என்றனர். தலை கவசம் வாங்க வந்திருந்த ஒருவர் கூறுகையில், ''அதிக எடை கொண்ட தலை கவசத்தை நீண்ட நேரம் அணிவதை எனது குழந்தை விரும்புவதில்லை.

ஆனால் குறைந்த எடையில் குழந்தைகளுக்கான தலை கவசங்களை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. என்னிடம் பயணம் செய்வதற்கு இரு சக்கர வாகனம் மட்டுமே உள்ளது. என்னால் எனது ஓட்டுனர் உரிமத்தை இழக்க முடியாது'' என்றார். விபத்துக்களின்போது குழந்தைகளுக்கு தலையில் படுகாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அவர்களும் தலை கவசம் அணிவதுதான் பாதுகாப்பானது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








