இந்தியாவின் பல்லை பிடித்து பார்க்கும் சீனா... எலக்ட்ரிக் வாகன கம்பெனிகளுக்கு பறந்த நோட்டீஸ்!!
நம் இந்தியாவிற்கும், அண்டை நாடான சீனாவிற்கும் இடையே பகைமை நீண்ட காலமாகவே புகைந்துக் கொண்டிருப்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. இரு நாட்டு அரசாங்கங்களும் நேரடியாக தாக்கி கொள்ளாவிட்டாலும், வணிக ரீதியாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதில் பாதிக்கப்படுவது என்னமோ கார்ப்பிரேட் நிறுவனங்கள் தான். இப்படிப்பட்ட சூழலில், சீன எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டாம் என சீன அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு பாதிப்பு என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்றைய கால உலகின் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, சீனா, ரஷ்யா இருந்தாலும், எதிர்காலத்தில் உலகின் இரு பெரும் இராஜ்ஜியங்களாக இந்தியாவும் சீனாவும் இருக்கும் என உலகளவில் சமூக ஆர்வலர்களும், பொருளாதார நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர். அதாவது, இதே வேகத்தில் சென்றால் நம் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அதேபோல், மறுப்பக்கம் சீனாவும் உலக பொருளாதாரத்தில் தனது ஆதிக்கத்தை தொடர போவது உறுதி. இதற்கு முக்கிய காரணம், இந்த இரு நாடுகளில் உள்ள மக்கள் தொகை ஆகும். மக்கள் தொகை தான் மிக பெரிய பலம் என்பதை உணர்ந்து சீன அரசு குறைந்துக் கொண்டுவரும் தனது மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம் இந்தியாவில் மக்கள் தொகையை பற்றி சொல்லவே வேண்டாம். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த இரு பெரும் நாடுகளும் அருகருகே அமைந்திருப்பதுதான்.
இன்னும் சொல்லப்போனால், பல ஆயிரம் கிமீ தொலைவிற்கு இரு நாடுகளும் தங்களது எல்லையை பகிர்ந்துக் கொள்கின்றன. சரி... சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம். உலகளவில் ஏற்றுமதியில் முன்னிலையில் இருப்பது சீனா என்பது நம் எல்லாருக்குமே தெரியும். அண்டை நாடு என்பதாலும், அதிக மக்கள் தொகை உடன் பொருளாதாரத்தில் சற்று பின்தங்கிய நாடு என்பதினாலும் நம் இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்தே சீன பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

ஆனால், சமீப காலமாக சீன பொருட்களை நம் நாட்டில் அதிகளவில் பார்க்க முடிவதில்லை. இதற்கு காரணம், மோடி அரசின் சீன பொருட்கள் மீதான மறைமுக தடை ஆகும். இங்கிருந்தும் தான் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் மறைமுக பனிபோர் உருவானது. இந்த நிலையில், சீன அரசாங்கம் தனது நாட்டின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு, இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மார்க்கெட் இப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டெக்னாலஜிகளை கண்டுப்பிடிப்பதிலும், அவற்றை உற்பத்தி செய்வதிலும் சீனா முன்னிலையில் உள்ளது. சீனாவில் பெட்ரோல்/ டீசல் வாகனங்களே இல்லாத பகுதிகளை கூட பார்க்க முடியும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு எதிர்கால மொபைலிட்டி எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

ஆனால், சமீப காலமாக நிறைய சீன இவி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களது வணிகத்தை விரிவுப்படுத்தி உள்ளன. குறிப்பாக, இந்தியாவில் பிஒய்டி, SAIC போன்ற முன்னணி சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வணிகத்தை பெருக்குவதற்காக பெரிய தொகைகளை முதலீடு செய்து வருகின்றன. SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்துடன் சமீபத்தில் கூட்டணி சேர்ந்தது அதன் ஒரு பகுதியே ஆகும்.
இந்த முதலீடுகளை தான் வேண்டாம் என சீன அரசாங்கம் அந்த நாட்டின் இவி நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, சிகேடி முறையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று அங்கு முழு வாகனமாக உற்பத்தி செய்யலாம் என இவி நிறுவனங்களுக்கு சீன அரசு தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இவ்வாறு சிகேடி முறையில் கொண்டுவரப்பட்டு, இங்கு அசெம்பிள் செய்யப்படும் வாகனங்களுக்கு இந்திய அரசு சற்று குறைவான வரியை விதிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக, வெளிநாடுகள் என சீன அரசாங்கம் கூறினாலும், அதன் அர்த்தம் இந்தியா தான். இந்தியாவில் சிகேடி முறையில் கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு இறக்குமதி வரி சற்று குறைவாக விதிக்கப்படுவதை அறிந்து இவ்வாறான அறிவிப்பை சீன அரசு வெளியிட்டுள்ளது போல் தெரிகிறது. இதற்கு சீன இவி நிறுவனங்களும், இந்திய அரசாங்கமும் எவ்வாறு தங்களது பதிலை கூறவுள்ளன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








