எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
நடுவானில் விமானிகள் அசந்து தூங்கிவிட்டால் என்ன நடக்கும் எனப் பலருக்குச் சந்தேகம் இருக்கிறது. இது குறித்த விரிவான மற்றும் தெளிவான விளக்கத்தைத் தான் இங்கே காணப்போகிறோம்.

நாம் எல்லோரும் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பயணித்திருப்போம். முதன் முறையாக விமானத்தில் பயணிக்கும் போது மிக ஆச்சரியமாகப் பயணத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டும் ரசித்துக்கொண்டும் இருப்போம். ஆனால் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு விமான பயணம் என்பது சற்று கடுப்பான விஷயம் தான்.

தரையில் பஸ், ரயில்களில் பயணிப்பதுபோல சிலுசிலுவென காற்று வராது, வேடிக்கை பார்க்க வெளியில் எதுவும் தெரியாது, விமானம் குறிப்பிட்ட உயரத்தை அடைந்துவிட்டால் அடுத்து சுற்றிலும் மேகம் மட்டும் தான் தெரியும். அதனால் பலர் விமான பயணத்தின் போது தூங்கிவிடுவார்கள். அதுவும் அவர்கள் விமானத்தில் தூங்குவதற்கு வசதியாக இருக்க நெக் பில்லோவை கூட கையிலேயே எடுத்து வந்துவிடுவார்கள்.

இப்படி பலர் விமானத்தில் தூங்கிக்கொண்டே பயணிப்பதைப் பார்க்கும் பலருக்கு எழும் சந்தேகம் விமான பயணத்தில் விமானிகள் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? பலர் விமானம் விபத்தில் சிக்கிவிடும் என நினைப்பார்கள்.

ஆனால் உண்மையில் அப்படிஎல்லாம் ஆகாது. சொல்லப்போனால் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானிகள் சிறிது நேரம் ஒய்வுத்துக்கொள்ள அனுமதியிருக்கிறது. இதைப் படிக்கும் போது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் இதைப் பற்றி விரைவாக காணலாம் வாருங்கள்.

பொதுவாக விமானங்களில் 2 விமானிகள் அதாவது, கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஆகிய இரண்டு பேர் இருப்பார்கள் என நமக்கு தெரியும். விமானங்களை பொதுவாக இவர்கள் இருவர் தான் இயக்குவார்கள்.

இது எல்லாம் குறைந்த தூர விமான பயணத்திற்குச் சாத்தியம் ஆனால் நீண்ட தூர விமானம் என்றால் என்ன நடக்கும்? உலகில் அதிகபட்சமாகத் தொடர்ந்து 19 மணி நேரம் பறந்து செல்லும் விமானங்கள் எல்லாம் இருக்கின்றன.

இப்படியாக நீண்ட நேரம் பறக்கும் விமானங்களில் 4 விமானிகள் பணியமர்த்தப்படுவார்கள். முதல் 2 விமானிகள் விமானத்தை இயக்குவார்கள். மற்ற விமானிகள் ஓய்வு எடுப்பார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு முதல் 2 விமானிகள் ஓய்வெடுக்க வந்துவிட்டு மற்ற 2 விமானிகள் விமானத்தை இயக்குவார்கள். இந்த விமானிகள் ஓய்வு எடுப்பதற்கு என்றே தனியாக இடம் இருக்கும் இதை விமானத்தில் ரகசிய அறை என்று அழைப்பார்கள்.

ஓய்வு என்பது இது மட்டுமல்ல விமானிகள் தங்கள் இருக்கும் இருக்கையிலேயே அதாவது காக்பிட்டிலேயே தூங்கவும் அனுமதியிருக்கிறது. அதாவது இதை Controlled rest என அழைக்கிறார்கள். அதாவது லேசான தூக்கம். பொதுவாக விமானம் டேக் ஆஃப் ஆகி தன் ரூட்டை பிடித்து பயணத்தைத் துவங்கியதும் அந்த ரூட்டில் பயணத்தின் போது வானிலை மாற்றங்கள் ஏதாவது ஏற்பட வாய்ப்புள்ளதா? விமானம் செல்லுவதில் ஏதாவது தடங்கல் உள்ளதா எனப் பார்ப்பார்கள்

அப்படி எதுவும் இல்லை என்றால் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிடுவார்கள். அதாவது விமானம் நிர்ணயிக்கப்பட்ட ரூட்டில் தானாகச் செல்லும் விமானிகள் அதை கண்டதால் செய்யத் தேவையில்லை. ஆனால் விமானிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். விமானத்தில் பாதையில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு விமானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் விமானிகள் விமானத்தைப் பாதையை மாற்ற வேண்டும்.

மற்றபடி விமானிகளுக்குப் பெரிய பணியில்லை. இந்த நேரத்தில் விமானிகள் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை Controlled rest எனப்படும் லேசான தூக்கத்தில் இருக்கலாம்.

விமானிகளுக்கு விமான பயணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பட்டியல் இருக்கிறது. அந்த பட்டியலிலேயே விமானிகள் Controlled rest எடுத்துக்கொள்ள அனுமதியிருக்கிறது.

உதாரணமாக ஒரு 5 -6 மணி நேர விமானம் பயணத்தில் விமானத்தின் பயணத்தின் நடுவே விமானிகள் தங்களுக்கான பணிகளை முடித்துக்கொண்டு பின்னர் Controlled rest எடுத்துக்கொள்ளுவார்கள். ஆனால் ஒரு விமானி இப்படியான தூக்கத்தில் இருக்கும் போது மற்ற விமானி விழிப்புடன் இருக்க வேண்டும். என விதிமுறை சொல்கிறது.

இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உலக அளவில் 56 சதவீதம் விமானிகள் தங்கள் விமான பயணத்தில் தூங்குகின்றனர் எனச் சொல்கிறது. கடந்த 2017ம் ஆண்டு இப்படி விமானி தூங்கியதால் ஒரு விமானம் மற்றொரு விமானத்தில் மோதி விபத்து ஏற்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் உடனிருந்த விமானி சுதாரித்துக்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி நீங்கள் விமானத்தில் பயணிக்கும் போது விமானி தூங்கிவிட்டால் என்ன நடக்கும் என யோசித்துத் தூங்காமல் எல்லாம் இருக்காதீர்கள். விமானிகள் தூங்கினால் விமான இயக்கத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

நீங்கள் சுகமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தான் ஒவ்வொரு நிறுவனமும் செயல்படுகிறது. இனி உங்கள் விமான பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்


Click it and Unblock the Notifications