இந்திய மக்கள் தொகை எண்ணிக்கையைச் சீக்கிரம் வாகனங்களின் எண்ணிக்கை சமன் செய்து விடும் போல... என்ன விபரம்?
இந்தியாவில் இதுவரை எத்தனை வாகனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரியுமா? இது குறித்த விரிவான மற்றும் தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இன்று இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனமாவது இருக்கிறது. சிலர் ஒன்றிற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் வீடுகளில் ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. அந்த அளவிற்கு மக்கள் வாகனங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மொத்தம் எத்தனை வாகனங்கள் இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் வாகனங்கள் குறித்துப் பதிவுகள் வாகன என்ற தளத்தில் வைத்து மத்திய அரசு பராமரித்து வருகிறது. அந்த தளத்தில் உள்ள தரவுகளை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அதன்படி தற்போது இந்தியாவில் மொத்தம் 21 கோடி இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல 7 கோடி கார்கள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 5.45 லட்சம் இருசக்கர வாகனங்கள் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாக இயங்கி வருகிறது. மேலும் கார்களை பொருத்தவரை இதுவரை 54,252 எலெக்ட்ரிக் கார்கள் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த பதிவின் படி 2.95 லட்சம் இருசக்கர வாகனங்கள் மற்றும் 18.47 லட்சம் கார்கள் பெட்ரோல்/டீசல் இல்லாமல் சிஎன்ஜி, எத்தனால், ஃப்யூயல் செல் ஹைட்ரஜன், எல்என்ஜி, எல்பிஜி, சோலார், மற்றும் மெத்தனால் ஆகிய எரிபொருளில் இயங்கும் வாகனம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போக நெடுஞ்சாலை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார். அதன்படி தற்போது மத்திய நெடுஞ்சாலைத் துறை தான் இந்தியாவில் உள்ள எல்லா நெடுஞ்சாலைகளுக்கும் பொறுப்பாக இருக்கிறது. புதிதாகச் சாலைகள் அமைப்பது ஏற்கனவே இருக்கும் சாலைகள், மழை, நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட காலங்களில் சேதம் ஏற்படும் போது அதை மத்திய நெடுஞ்சாலைத் துறையே துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக சரி செய்கிறது.

இது போக ஏற்கனவே இருக்கும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல், பாலங்களை மேம்படுத்துதல், விரிவுபடுத்துதல், ஆகிய பணிகளையும், மத்திய நெடுஞ்சாலைத் துறையே செய்கிறது. இதுபோக ஒரு சாலைகளில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்தார் போலச் சாலையின் அகலம் மற்றும் பிற வசதிகளையும் செய்து கொடுக்கிறது. எனத் தெரிவித்தார்.

இது போக நாடு முழுவதும் தேவையான இடங்களில் எக்ஸ்பிரஸ் சாலைகளை அமைப்பது நெடுஞ்சாலைத்துறையின் பணியே, அந்த துறையினர் எந்த இரு நகரங்களுக்கு இடையே அதிகமாகப் போக்குவரத்து இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு அதைக் கட்டமைப்பது அதற்குத் தேவையான விஷயங்களைச் செய்வதும் இந்த துறையின் பணிகள் தான்.

சாலை கட்டமைப்பை இந்த துறை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்து வருகிறது. இது போகச் சாலையில் சுங்கச்சாவடிகளை அமைத்து அதன் மூலம் வசூலும் நடத்தி வருகிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு சுங்கச்சாவடி மூலம் மட்டுமே ரூ120 கோடி வசூலாகிறது. இன்று அனைத்து வாகனங்களும் ஃபாஸ்ட் டேக் முறையில் தான் பணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் நெடுஞ்சாலைகளை எல்லாம் முதலீட்டுக்களை ஈர்க்கும் என்ற அடிப்படையை வைத்துக் கட்டமைக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த இந்த நெடுஞ்சாலை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியா முழுவதும் ஒரு நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டு முடிந்தவுடன் அப்பகுதியில் உள்ள பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications