நடுரோட்டில் காரை விட்டுவிட்டு, 3கிமீ-க்கு ஓடியே சென்ற மருத்துவர்!! எதற்காகனு தெரிஞ்சா நீங்களும் பாராட்டுவீங்க!
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட தனது காரை அங்கேயே விட்டுவிட்டு, நோயாளியின் சிகிச்சைக்கு நேரமானதால் 3 கிமீ தொலைவிற்கு ஓடியே சென்ற மருத்துவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். யார் இவர்? அதன்பின் என்ன நடந்தது? என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குளுமையான காலநிலை, சுற்றி பார்ப்பதற்கு ஏகப்பட்ட இடங்கள் என இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூர் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நகரமாக விளங்குகிறது என்றால், அதில் மிகையில்லை. ஆனால் பெங்களூருவில் வசிப்பதற்கும், அங்கு பணிப்புரிவதற்கும் மாற்று மாநிலத்தவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றால், அது அந்த மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கே.

இந்தியாவின் மற்ற மாநகரங்களுடன் ஒப்பிடுகையில், பெங்களூருவில் சொந்த வாகனத்தில் சென்றாலும், சில கிமீ தொலைவிலான பயணித்திற்கே நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. அதிலிலும், மெட்ரோ இரயில் சேவைக்கான கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட்ட பின்பு, இந்த சூழல் மேலும் மோசமாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே போக்குவரத்து சிக்னல்களில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்பதை நாள் ஒன்றுக்கு குறைந்தப்பட்சம் ஒரு தடவையாவது பார்த்துவிடலாம்.

இவ்வாறு பெங்களூருவில் நோயாளியின் முக்கிய சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தபோது மருத்துவர் ஒருவரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளது. இதன் காரணமாக அந்த மருத்துவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு ஓடி சென்றுள்ளார். பின்னர் இந்த நிகழ்வினை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
நோயாளியின் உயிரை தகுந்த நேரத்தில் காப்பாற்ற கிட்டத்தட்ட 3 கிமீ தொலைவிற்கு ஓடியே சென்றுள்ள இந்த மருத்துவரின் பெயர் டாக்டர் கோவிங் நந்தகுமார் ஆகும். இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான இவர் பெங்களுருவில் உள்ள மணிபால் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 10 மணியளவில் பெண் நோயாளி ஒருவருக்கு லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக நேரம் ஒதுக்கி இருந்தார்.

ஆனால் காலை 10 மணி என்பது பெரும்பாலானோர் அலுவலகத்திற்கு செல்லும் நேரம் என்பதால் டாக்டரின் கார் சார்ஜாபுர்-மராதல்லி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளது. சிறிதுநேரம் காத்திருந்து பார்த்த டாக்டர், அவசரமாக மேற்கொள்ள உள்ள அந்த அறுவை சிகிச்சைக்கு நேரம் ஆகி கொண்டிருப்பதை உணர்ந்து, தான் இருந்த இடத்தில் இருந்து மருத்துவமனை உள்ள பகுதி வரையிலான 3 கிமீ-க்கு ஓடி சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அவர் எடுத்துக்கொண்ட சிறிய வீடியோ க்ளிப்பை தான் மேலே காண்கிறீர்கள். இதுகுறித்து பின்னர் டாக்டர் கோவிந்த் நந்தகுமார் அளித்த பேட்டியில், "பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள சர்ஜாபூரில் இருந்து மத்திய பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனைகளுக்கு நான் தினமும் பயணம் செய்கிறேன். அந்த குறிப்பிட்ட அறுவை சிகிச்சைக்கு நான் வீட்டை விட்டு சரியான நேரத்தில் வெளியேறினேன்.

ஆனால் பெரும் போக்குவரத்து நெரிசலை பார்த்து காரை டிரைவரிடமே விட்டுவிட்டு மேலும் மேலும் யோசிக்காமல் மருத்துவமனை நோக்கி ஓடினேன். நான் மருத்துவமனைக்கு சென்றவுடன் அறுவை சிகிச்சை செய்ய எனது குழு தயாராகிவிட்டது" என்றார். இவர் கூறியதுபோல், டாக்டர் மருத்துவமனையை அடைவதற்கு முன்னரே அவரது குழு நோயாளிக்கு அனேஸ்திசியா என்ற வலி நிவாரணியை கொடுக்க தயாராகிவிட்டனர்.

டாக்டர் வந்தவுடன் செய்ய வேண்டியவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர். பின்னர் டாக்டர் மருத்துவமனையை அடைந்த பின் சிறிதும் தாமதிக்காமல், தான் செய்ய வேண்டிய செயல்முறைகளை செய்ய துவங்கினார். இந்த அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்தது. நோயாளியும் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை முடித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

எதனால் இவர் சென்ற சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. பெங்களூருவில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதையும், அதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதை பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது மராதல்லி போன்ற ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி தான்.

இதனாலும் டாக்டர் கோவிந்த் நந்தகுமார் சென்ற சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக, பெங்களூரு-மங்களூர் நெடுஞ்சாலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாக நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் பெங்களுருவின் மேலும் சில பகுதிகளும் மழைநீரில் மிதந்தன.


Click it and Unblock the Notifications








