விலை உயர்ந்த காரை ஏத்தி நாயை கொலை செய்த உரிமையாளர்... பலவீனமான இதயம் உள்ளவங்க வீடியோவை பாக்காதீங்க...
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால் இதை புரிந்து கொள்ளாத ஒரு சில மனிதர்கள், விலங்குகளை துன்புறுத்துகின்றனர். எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சிலர் திருந்துவதாக இல்லை. இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று கோவாவில் (Goa) தற்போது நிகழ்ந்துள்ளது.
கோவாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார் உரிமையாளர் ஒருவர், சாலையில் தூங்கி கொண்டிருந்த ஒரு நாய் மீது வேண்டுமென்றே காரை ஏற்றியுள்ளார். ஒரு குடியிருப்பு வளாகத்தின் முன் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த குடியிருப்பு வளாகத்தின் முன் பகுதியில் உள்ள கேட்டின் முன்னால் நாய் தூங்கி கொண்டிருந்தது.

அப்போதுதான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் காரின் உரிமையாளர், வேண்டுமென்றே நாய் மீது காரை ஏற்றுவதை, இந்த வீடியோ உறுதி செய்கிறது.
அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்க்கலாம். ஏனெனில் கேட்டிற்கு அருகே வந்தபோது, அவர் காரை மெதுவாகதான் ஓட்டுகிறார். எனவே அவர் நாயை பார்த்திருக்க கூடும். அத்துடன் நாய் படுத்திருந்த இடத்திற்கு அருகே போதுமான அளவிற்கு இடைவெளியும் இருந்தது. எனவே அவர் காரை திருப்பியிருக்கலாம்.

ஆனால் இதை எல்லாம் செய்யாமல் நாய் மீது வேண்டுமென்றே காரை ஏற்றியுள்ளார். கார் ஏறியவுடன், நாய் அலறியடித்து கொண்டு ஓடுவதை பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது. எனவே மெர்சிடிஸ்-பென்ஸ் காரின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்த தொடங்கினர். இதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூரமான செயலை செய்தவரின் பெயர் பரத் நடேகர் என கூறப்படுகிறது. இவர் காரை ஏற்றிய அடுத்த அரை மணி நேரத்தில் நாய் உயிரிழந்து விட்டது. இவர் நாய்களை கொலை செய்வது இது முதல் முறை கிடையாதாம். இதே மெர்சிடிஸ்-பென்ஸ் காரை ஏற்றி, வேறு ஒரு நாயையும் இதற்கு முன்பாக அவர் கொலை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாய் போன்ற விலங்குகளிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து விட்டு, நமது ஆதிக்கத்தை அவைகள் மீது செலுத்த கூடாது. எனவே இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இதே கோவாவில் நாய் ஒன்று வாகனங்களில் லிஃப்ட் கேட்டு பயணம் செய்வதாக நேற்று செய்தி ஒன்றை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அந்த நாயிடம் வாகன ஓட்டிகள் பலரும் அன்புடன் நடந்து கொள்வதையும் அந்த செய்தியில் கூறியிருந்தோம். ஆனால் அதே கோவாவில் இப்படி இரக்கமற்ற செயல்களும் நடைபெற்றிருப்பது வேதனையானது.


Click it and Unblock the Notifications








