தன் மீது மோதிய காரை தேடி வந்து பழி வாங்கிய நாய்! கேமரா மட்டும் இல்லனா ஒருத்தரும் இத நம்பியிருக்க மாட்டாங்க!
இந்திய சாலைகளில் நாய்களால், வாகன ஓட்டிகளுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டுள்ளன. வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கும் போது, திடீரென நாய்கள் குறுக்கே வந்து விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களில் சிக்க வேண்டியதாகி விடுகிறது. மேலும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி சென்று, அவர்களை கீழே விழ வைத்தும் விடுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் வாகனங்களில் அடிபட்டு நாய்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் கூட இந்திய சாலைகளில் வாடிக்கையான ஒன்றாகதான் இருந்து கொண்டுள்ளது.
பெரும்பாலும் நாய்கள், வாகனங்களில் அடிபட்டு காயமடைந்தால், அந்த பிரச்னை அங்கேயே முடிந்து விடும். ஆனால் மத்திய பிரதேச (Madhya Pradesh) மாநிலத்தின் சாஹர் பகுதியில், தன் மீது மோதிய ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரை, நாய் ஒன்று பழிக்கு பழி வாங்கியுள்ளது.

அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஒரு சேர ஏற்படுத்தும் இந்த சம்பவம், ஒரு வைரல் வீடியோவின் (Viral Video) மூலமாக தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. நாய் பழிக்கு பழி வாங்கிய சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் பெயர் பிரகலாத் சிங் கோஷி என்பதாகும்.
இவர் கடந்த ஜனவரி 18ம் தேதி குடும்பத்துடன் ஹூண்டாய் ஐ20 காரில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கருப்பு நிற நாய் ஒன்றின் மீது அவரது கார் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த நாய் சிறிது தூரம் காரை துரத்தியது.

பின்னர் ஒரு கட்டத்தில் நின்று விட்டது. பிரகலாத் சிங் கோஷியின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு முன்னால், இந்த சம்பவம் நடைபெற்றது. இதற்கிடையே வீடு திரும்பியதும், இதை எல்லாம் பொருட்படுத்தாமல், பிரகலாத் சிங் கோஷி தூங்க சென்று விட்டார். கார் அவரது வீட்டிற்கு வெளியே சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, பிரகலாத் சிங் கோஷி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். ஏனெனில் அவரது காரின் முன் பக்க பானெட் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இதை எல்லாம் குழந்தைகள் யாராவது செய்திருக்கலாம் என்றுதான், பிரகலாத் சிங் கோஷி நினைத்தார்.
ஆனால் அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோதுதான், உண்மையில் என்ன நடந்தது? என்பது பிரகலாத் சிங் கோஷிக்கு தெரிய வந்தது. ஆம், 2 நாய்கள் சேர்ந்துதான் அந்த காரை சேதப்படுத்தியிருந்தன. இதில் ஒரு நாய், முந்தைய தினம் பிரகலாத் சிங் கோஷியின் ஹூண்டாய் ஐ20 காரில் எதிர்பாராதவிதமாக அடிப்பட்டது ஆகும்.
தன் மீது மோதிய ஆத்திரத்தில், நள்ளிரவு நேரத்தில் சரியாக அடையாளம் கண்டு கொண்டு வந்து, நாய் பழிக்கு பழி வாங்கியதை உணர்ந்ததும், பிரகலாத் சிங் கோஷி அதிர்ச்சியடைந்து விட்டார். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், 2 நாய்களை நீங்கள் காண முடியும். இதில், கருப்பு நிற நாய்தான், காரில் அடிபட்டது.
அந்த நாய்தான், ஆத்திரத்தில் காரை அதிகமாக சேதப்படுத்தியுள்ளது. மற்றொரு நாய், அதன் 'ஃப்ரெண்ட்' என கூறப்படுகிறது. இந்த நாய், காருக்கு ஓரளவிற்குதான் சேதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இதன் மூலமாக தனது நண்பனுக்கு அந்த நாய் உதவி செய்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐ20 காரின் முன் பக்க பானெட்டில் இந்த நாய் கீறல்களை அதிகளவு போட்டுள்ளது. பழிக்கு பழியாக இது போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றிருப்பது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். நாய் கீறல்களை போட்டதை சரி செய்ய, அந்த காரின் உரிமையாளருக்கு அனேகமாக 15-20 ஆயிரம் செலவு ஆகும் என கூறப்படுகிறது.
தற்போது அந்த நாயின் கோபம் தணிந்திருக்கும் எனவும், மேற்கொண்டு அது எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என நாம் நம்பலாம். இருப்பினும் சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் என 2 தரப்பிற்குமே நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








