நண்பர்கள் காரை இரவல் கேட்டா கொடுக்காதீங்க... சிக்கல்ல மாட்ட நேரிடலாம்!
நம்மில் பலர் நண்பன் எதைக் கேட்டாலும் உடனே அள்ளிக் கொடுக்கும் மனம் படைத்தவர்களாக இருக்கின்றோம். நீங்களும் இதுமாதிரியான ஓர் நபரா?, உங்கள் நண்பர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக எந்தவொரு பொருளையும், குறிப்பாக, வாகனங்களை அடிக்கடி இரவல் கொடுக்கும் வழக்கம் உடையவரா?, அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்.
உங்களிடம் இருந்து காரை வாங்கி செல்லும் நண்பன் தெரியாத் தனமாக விபத்தில் சிக்கினாலோ அல்லது விபத்தை ஏற்படுத்தினாலோ உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் முழுமையான பதிவிற்குள் போகலாம். அண்மையில் தலைநகர் டெல்லியில் உள்ள கஞ்ஜவாலா பகுதியில் அரங்கேறிய விபத்து சம்பவம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.

ஐந்து பேர் கைது
இந்த விபத்து சம்பவத்தில் சம்பந்தம் உடையவர்கள் ஐந்து பேரும் போலீஸாரால் அடையாளம் காணப்பட்டு, தற்போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டை மது போதை உடன் என்ஜாய் செய்துக் கொண்டிருந்த இவர்கள், வாகனத்தில் இளம் பெண் சிக்கியதுகூட தெரியாமல் காரில் வலம் வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர். சுமார் 12 கிமீ வரை அவர்கள் பெண் உடலுடன் சுற்றி வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் மிகக் கொடூரமான காயங்களுக்கு ஆளாகிய அஞ்சலி எனும் அந்த இளம் பெண் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகினார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்தவர்கள் என ஐவருமே தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவர் ஓட்டிய அந்த பலினோ கார் அவருடையது அல்ல என்பது தெரிய வந்திருக்கின்றது. தற்போது அந்த கார் போலீஸாரின் பிடியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே, ஓர் நபர் மற்றொரு நபரின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், அந்த காரின் உரிமையாளர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற சந்தேகம் எழும்பி உள்ளது.

என்ன பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்
கார் அல்லது பயணிகள் வாகனம் எது விபத்தை ஏற்படுத்தினாலும் ஐபிசி பிரிவு 279, 304 அல்லது 304 ஏ ஆகிய பிரிவுகளின்கீழே வழக்கு பதிவு செய்யப்படும் என சட்டத்துறையைச் சேர்ந்த எக்ஸ்பர்ட்டுகள் தெரிவிக்கின்றனர். அஞ்ஜலி விபத்து நிகழ்விலும் இந்த பிரிவுகளின்கீழே குற்றாம்சாட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆமாங்க, அஞ்ஜலி விபத்து வழக்கில் சிக்கியிருக்கும் ஐவர் மீதும் இந்த அனைத்து பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாமா?
ஐபிசி பிரிவு 279-ம், தண்டனை விபரமும்:
பொது சாலையில் வாகனத்தை இயக்கும்போது பிற உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சவாரி செய்தாலோ, ஆபத்தை ஏற்படுத்தினாலோ அவர் மீது இந்த பிரிவின்கீழ் வழக்கு பதியலாம். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இல்லை எனில் ஆயிரக் கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரு தண்டனைகளும் வழங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. குற்றம் கடுமையானதாக இருக்கும்பட்சத்தில் இத்தகை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐபிசி பிரிவு 304-ம், தண்டனை விபரமும்:
கொலை முயற்சியாக இல்லாமல், தவறுதலாக (விபத்தாக) ஏற்படும் உயிரிழப்புகளின்போது எடுக்கப்படும் நடவடிக்கையே இந்த ஐபிசி பிரிவு 304 ஆகும். இந்த பிரிவின்படி சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இத்துடன் குற்றவாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படலாம். இதனால் உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும், உள்நோக்கம் இன்றி செய்யப்படும் கொலைகளுக்கும் இந்த வழக்கே பதியப்படுகின்றது.
ஐபிசி 304ஏ-வும், தண்டனை விபரமும்:
அலட்சியமான செயல்பாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின்போது சம்பந்தப்பட்ட நபர்மீது எடுக்கப்படும் நடவடிக்கையே இது ஆகும். இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளிதான் என்பது கண்டறியப்பட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும். தண்டனைக் காலம் இரண்டு ஆண்டுகள் அல்லது அபராதம் விதிக்கப்படும். அஞ்ஜலியின் விபத்து போன்ற நிகழ்வுகளில் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் என இரண்டும் வழங்க நேரிடலாம்.
இந்த விஷயத்தில் கார் உரிமையாளர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்?
விபத்தின் போது காரை ஓட்டியவர் காரின் உரிமையாளராக இல்லாதவர் எனில் காரின் உரிமையாளருக்கு எந்த பிரச்னையும் வராது. இருப்பினும், வழக்கில் கார் சம்பந்தப்பட்டிருப்பதால் காரின் உரிமையாளர் போலீஸாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்குவார். ஆகையால், போலீசார் விசாரிக்க நேரிட்டால் அதற்கு முழு ஒத்துழைப்பும் காரின் உரிமையாளர் வழங்க வேண்டும். ஒரு வேளை காரின் உரிமையாளருக்கு தெரிந்தோ அல்லது காரின் உரிமையாளரின் தூண்டுதலின்பேரில் விபத்து ஏற்படுத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அந்த காரின் உரிமையாளரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று சதி திட்டங்களுக்கு வழக்கு கொலை வழக்காக பதியப்பட்டு கடுமையான தண்டனை கொலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications
