2 டன் வால்வோ காருக்கும் அசங்காத கண்ணாடி பாலம்... !!
கான்ஜூரிங் படத்தை தனியாக அமர்ந்து பார்த்தால் எப்படி ஒரு த்ரில்லும், பயமும் ஏற்படுமோ, அதைவிட பல மடங்கு நடுக்கத்தைத் தரக்கூடியவை அட்வென்ட்சர் பயணங்கள்.
அமேஜான் உள்ளிட்ட அடர்ந்த காடுகள், பனிச் சரிவுகள், பள்ளத்தாக்குதள் என பல அதிசயங்களை நேரில் பார்க்கும்போது இயற்கைக்கு முன்னால், எவருமே பெரிய ஆள் கிடையாது என்ற ஞானம் பிறக்கும்.
அப்படி ஒரு அட்வென்ட்சரான பயணங்கள் எந்த அளவுக்கு திகைப்பான அனுபவத்தை தருகிறதோ, அதற்கு சற்றும் குறையாமல் ஸ்கூபா டைவ் உள்ளிட்ட சில த்ரில் விளையாட்டுகளும் மயிர் கூச்செரியும் நடுக்கத்தைத் தருகின்றன.
அவ்வாறு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட திகைப்பூட்டும் இடங்கள் பல உள்ளன. அதில் ஒன்று சீனாவின் ஜான்ஜியாஜி கிராண்ட் கேன்யான் தேசியப் பூங்கா. பள்ளத்தாக்குடன் இணைந்த பூங்கா என்பதால், பார்வையாளர்களுக்கு மெச த்ரில்லான ஒரு அனுபவத்தைக் கொடுக்க அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி, 430 மீட்டர் தொலைவுக்கு பள்ளத்தாக்குக்கு நடுவே கண்ணாடியாலான தொங்கும் பாலத்தை அமைத்தனர். 6 மீட்டர் அகலம் கொண்ட அந்த பாலத்தின் கீழ் 300 மீட்டர் பள்ளத்தாக்கு உள்ளது. உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் இதுதான்.
பாலத்தில் நடக்கும்போது கீழே பார்த்தால், இதய பலகீனமுள்ளவர்கள் அப்படியே மயக்கம் போட்டு விழ வேண்டியதுதான். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வடிமைக்கப்பட்டு அந்த அன்வென்ட்சரிங் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 800 பேரைத் தாங்கக் கூடிய வலிமை அந்த கண்ணாடி பாலத்துக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டது. அதற்காக வால்வோ எக்ஸ்சி 90 மாடல் காரை பாலத்தின் மேல் ஓட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அண்மையில் அந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அந்தரத்தில் பறக்கும் வால்வோ காரைப் பார்த்து மக்கள் அதிசயித்தனர்.
இதோடு விட்டார்களா பூங்கா நிர்வாகிகள்? இரும்பாலான பெரிய சுத்தியலைக் கொண்டு கண்ணாடி பாலத்தை அடித்து உடைக்க முடிவு செய்து அதையும் அரங்கேற்றினர்.
இத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது கண்ணாடி பாலம். விரைவில் அந்தப் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications








