பறக்கும் கோட்டை! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா?
இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் பற்றிய ரகசியங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்க இந்தியா தயாராகி வருகிறது. வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள், டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள், மிகவும் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிற்கு 'விசிட்' செய்வதை டொனால்டு ட்ரம்ப்பும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்.

உலகப்புகழ் பெற்ற ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிற்கு பறந்து வரவுள்ளார். இந்த விமானத்தை 'பறக்கும் கோட்டை' என்று சொன்னால் மிகை அல்ல. மிக பிரம்மாண்டமான இந்த விமானம் போயிங் (Boeing) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். இதில், அதிநவீன வசதிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.

அமெரிக்க அதிபர் ஓய்வு எடுப்பதற்கு மட்டுமின்றி, அவர் அலுவலக கூட்டங்களை நடத்தவும் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது. மோசமான சூழ்நிலைகளில், அமெரிக்க அதிபரின் உயிரையும் இந்த விமானம் காப்பாற்றும். அப்படிப்பட்ட ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் பற்றிய பிரம்மிப்பூட்டும் உண்மைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

அமெரிக்க அதிபரின் பயன்பாட்டிற்கு என இரண்டு போயிங் 747-200பி சீரிஸ் (Boeing 747-200B Series) விமானங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவைதான் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த இரண்டு விமானங்களும் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் பாடியில், 'United States of America' என்ற வார்த்தையும், அமெரிக்க கொடியும் இடம்பெற்றிருக்கும். அத்துடன் அமெரிக்க அதிபரின் முத்திரையும் இருக்கும்.

வர்த்தக விமானங்கள் குறிப்பிட்ட அளவு எரிபொருளுடன் வானில் பறக்க தொடங்கும். மீண்டும் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்றால், அவை தரையிறங்க வேண்டும். ஆனால் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு இந்த பிரச்னை கிடையாது. நடு வானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் திறன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு உள்ளது. எனவே எரிபொருள் தீர்ந்து விட்டால் தரையிறங்க வேண்டியதில்லை.

பிரம்மாண்டமான உடல் கூட்டை மட்டும் வைத்து, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களை பறக்கும் கோட்டை என நாங்கள் மதிப்பிடவில்லை. உண்மையில் இதன் பாதுகாப்பு அமைப்புகள் காரணமாகதான் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் பறக்கும் கோட்டை என வர்ணிக்கப்படுகின்றன. அத்துடன் மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களையும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் பெற்றுள்ளன.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் கேபின் 3 லெவல்களில், 4 ஆயிரம் சதுர அடி ஃப்ளோர் ஸ்பேஸை கொண்டது. இதில், பெரிய அலுவலகம் மற்றும் கான்ஃபரன்ஸ் அறையுடன் கூடிய பகுதியில் அமெரிக்க அதிபர் இருப்பார். அதே சமயம் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில், நிரந்தரமான டாக்டரும் இருப்பார். அத்துடன் தேவைப்பட்டால் அதிபருக்கு வழங்க கன்டெய்னர்களில் ரத்தமும் வைக்கப்பட்டிருக்கும்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு வழங்க முடியும். ஏர் ஃபோர்ஸ் ஒன் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விமானம் எப்போதும் தனியாக பறக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபருக்கு உதவுவதற்காக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு முன்பு, மேலும் சில விமானங்களும் பறந்து வரும்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில், பத்திரிக்கையாளர்கள், மூத்த ஆலோசகர்கள், ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் மற்ற விருந்தினர்களுடன் அமெரிக்க அதிபர் பயணிப்பார். இவர்கள் அனைவரும் தங்குவதற்கு இட வசதி உள்ளது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் 26 பணியாளர்கள் உள்பட 102 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன், உலகிலேயே மிக பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாக உள்ளது. உலகிலேயே மிக முக்கியமான நபர்களில் ஒருவராக அமெரிக்க அதிபர் உள்ளார். எனவே அதற்கேற்ப பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: Reuters


Click it and Unblock the Notifications








